search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை மேம்பாலத்தில் பயங்கர விபத்து: போக்குவரத்து பாதிப்பு
    X

    குழித்துறை மேம்பாலத்தில் பயங்கர விபத்து: போக்குவரத்து பாதிப்பு

    • அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    குழித்துறை:

    வர்த்தக நகரமான மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க குழித்துறை ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் நவீன முறையில் இரும்பு மேம்பாலம் அமைக்கப் பட்டது.

    இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது முதல் அடிக்கடி அப்பகுதியில் வாகன விபத்துகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து கம்பி லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை கல்லுபாலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி குழித்துறை மேம்பாலப்பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற கார் மற்றும் ஆம்னி பஸ்சை லாரி டிரைவர் முந்த முயன்றார்.

    அவர் லாரியை வேகமாக இயக்கி வாகனங்களை முந்த முற்பட்டார். அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மற்றும் ஆம்னி பஸ் மீது உரசியது.

    மேலும் சாலையின் நடுவே குறுக்கு மறுக்காக லாரி ஓடி உள்ளது. அப்போது எதிரே கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் நோக்கி வந்த லாரியை கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்த ஷாஜி (30) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது லாரி தாறுமாறாக ஓடி வருவதை கண்ட அவர் பயந்து வாகனத்தில் இருந்து குதித்து தப்பி உள்ளார்.

    இதையடுத்து 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதி சுமார் 10 மீட்டர் தூரம் டாரஸ் லாரியை இழுத்து சென்று மேம்பாலத்தின் சுவரில் மோதி நின்றது.

    இதில் 2 வாகனங்களின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்த நிலையில் லாரி டிரைவரின் கால்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி வெளியேற முடியாமல் பரிதவித்து உள்ளார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த குழித்துறை தீயணைப்பு துறையினர் அவரை சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

    இந்த விபத்தில் 2 லாரிகளின் டிரைவர்களும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    மேலும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்ப டுத்தினர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×