search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய முயன்றனர்-சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு
    X

    விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய முயன்றனர்-சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு

    • 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு.
    • எனது உயிருக்கு பாதுகாப்பில்லை.

    திருச்சி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

    அப்போது தமிழக அரசு குறித்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும் அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சிறுகமணி பேரூராட்சி கவுன்சிலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அதன் பின்னர் தென்காசி மாவட்டம் வீராணம் பகுதியில் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவரை திருச்சி தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து திருச்சி மாஜிஸ்திரேட் எண் 3 ஆஜர் படுத்தினர.

    நீதிபதி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் ஜாமீனில் விடுவித்தார். பின்னர் சாட்டை துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

    தி.மு.க. அரசு என் மீது போட்ட 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு. எங்கள் தரப்பு வக்கீல்கள் வைத்த வாதங்களின் அடிப்படையில் நீதிபதி என்னை விடுவித்துள்ளார்

    14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்து வருகிறது. ஆனால் என்னை எஸ்.சி., எஸ்.டி. பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் முடக்க பார்க்கிறார்கள்.

    நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவன். அந்த மக்களுக்காகவே அதிகமாக குரல் கொடுத்துள்ளேன்.

    நான் மேற்கோள் காட்டி பாடிய பாடல் 31 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பாடலாக உள்ளது.

    சண்டாளன் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வார்த்தை என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. யாரும் இந்த அரசுக்கு எதிராக பேசக்கூடாது என தி.மு.க. அரசு அடக்கு முறையை கையாள்கிறது.

    பா.ஜ.க.வை பாசிசம் என்று சொல்லும் தி.மு.க.வுக்கு இது பாசிசம் என்பது தெரியாதா?

    இந்த வழக்குக்கு எந்த தொடர்பும் இல்லாத எனது கைபேசியை முதலில் போலீசார் பறித்துக் கொண்டார்கள்.

    என்னை கைது செய்தால் போலீசாரின் டெம்போ வேனில் அழைத்து வர வேண்டும். அதற்கு மாறாக என் காரிலேயே அழைத்து வந்தனர். அப்போது டிரைவர் முழு போதையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்களில் என்னை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்ய பார்த்தது.

    மதுரையில் விபத்து நடந்து கார் சேதமடைந்த பின்னரே போலீஸ் வேனில் ஏற்றினர். எனது உயிருக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்றம் தான் என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×