என் மலர்
திருச்சிராப்பள்ளி
- தமிழகம் முழுவதும் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ.10 கோடி செலவில் 25 இடங்களில் கட்டப்பட்டுள்ள மூத்தோர்களுக்கான அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அதன்படி, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- முதலமைச்சர் ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 27). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் பழைய தபால் நிலைய சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்திசையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரை செல்வன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர். பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது நான்கு பேரும் பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உயிர் பயத்தில் அப்பகுதியில் அலறியடி ஓடியுள்ளார்.
காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரை செல்வன் தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் வீடு திறந்து இருந்ததால் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிரைண்டர் பக்கத்தில் போய் ஒளிந்து கொண்டுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் வீட்டுக்குள் நுழைந்து எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் காவலர் குடும்பத்தின் கண்முன்னே தாமரை செல்வனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட காவலர் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டுள்ளனர்.
இதனை சக காவலர்கள் கல்லால் கொலையாளிகளை தாக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததால் அனைவரும் தூரத்தில் இருந்தே தாக்கியுள்ளனர். இதில், ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாமரை செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வந்துள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
- புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
- ரூ. 773 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்ட பணிகளை வழங்குகிறார்.
புதுக்கோட்டை:
திருச்சி மற்றும் புதுக்கோட்டைமாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந்தேதி திருச்சி வருகிறார். அன்றைய தினம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இரவு சாலை மார்க்கமாக கார் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் 10-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம். பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த திருமண நிகழ்ச்சி திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் நடைபெறுகிறது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பாவை அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அன்புச்சோலை முதியோர் இல்ல செயல்பாடுகளை தொடங்கி வைக்கிறார். பிறகு, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்காக கீரனூர் புறப்பட்டு செல்கிறார். கீரனூர் அருகே உள்ள களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.201 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.223 கோடியே 6 லட்சம் செலவில் முடிவுற்ற 577 திட்ட பணிகளை திறந்து வைத்தும், 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு ரூ. 348 கோடியே 43 லட்சம் மதிப்பிலான மொத்தம்
ரூ. 773 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்ட பணிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்காக மூகாம்பிகை கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம்,
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கோட்டம் முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி லாலாபேட்டை, தக்கம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், சிப்காட் பேஸ்-3, கல்மேல்குப்பம்,வில் வநாதபுரம், எருக்கம்தொட்டி, கன்னிகாபுரம், கல்புதூர், நரசிங்கபுரம், சீக்கராஜபுரம், பெல் டவுன்ஷிப், கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.
- ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது.
- நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் ஜெயிப்பேன்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் நிகழ்வு போல பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் இருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரமாக மாறி உள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் நீண்ட நாட்களாக அதிகமாக மது விற்பனை நடைபெற்று உள்ளது. காவல்துறை சுட்டு பிடித்தோம் என்கிறார்கள். இதற்கு நாம் தலைகுனிய வேண்டியதாக உள்ளது.
ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது. கடும் சட்டங்கள் இருந்தால் தான் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும். பொள்ளாச்சியில் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ளது.
துரோகத்தைப் பற்றி, சமூக நீதி, சுயமரியாதை பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. ஆரியத்தை எதிர்க்க வந்தது திராவிடம் என்கிறார்கள். தமிழன் என்று வந்தால் பார்ப்பனர்கள் நானும் தமிழன் என்று உள்ளே வந்து விடுவார் என்று வீரமணி போன்றவர்கள் பேசுகிறார்கள்.
அதே கருத்தை தான் அ.தி.மு.க.வினரும் பேசுகிறார்கள். அப்படி இருக்கும் போது ஜெயலலிதா தலைமையை இவர்கள் எப்படி ஏற்றார்கள்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தில் பா.ஜ.க. தேவையற்ற வேலையை செய்கிறது. மக்களை எப்போதும் பதற்றத்தோடு வைத்து பார்க்கிறார்கள். அப்போதான் செய்கிற தவறு வெளியே தெரியாமல் இருக்கும்.
ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயரை நீக்குவோம் என தேர்தல் ஆணையம் இப்போது தெரிவிக்கிறது. 2 மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும். பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டு வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையை செய்கிறார்கள்.
அப்படி வழங்கும் போது தமிழ்நாடு மற்றும் ஒரு பீகாராக மாறிவிடும். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நான் சொன்ன அதே கருத்தை தான் நடிகர் அஜித்தும் தெரிவித்து உள்ளார். இந்த முறையே தவறு, இது போன்ற கலாச்சாரமே தவறு என்று தான் அஜித் கூறுகிறார்.
அனைத்து அரசியல் கட்சித் தலைவருக்கும் பொதுவான இடத்தை ஒதுக்கி ஒவ்வொருவரும் அங்கு வந்து பேசிவிட்டு செல்லட்டும். மக்கள் அதை பார்த்து ஓட்டு போடட்டும். இதைத்தான் அவரும் சொல்கிறார்.
மற்ற நாடுகளில் இங்கு செய்வது போன்ற பிரசாரம் போன்ற நிலை இல்லை.
வருகின்ற தேர்தலில் இங்கு கட்சிகளுக்கு போட்டி அல்ல கருத்துகளுக்கு தான் போட்டி. நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் ஜெயிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திருச்சி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உடன் இருந்தார்.
- காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
- போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு,
திருச்சி:
ஸ்ரீரங்கம் கோட்டம், சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே. பார்க், ரெட்டி மாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதவத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை போசம்பட்டி, கொய்யா தோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விரிவாக்கம், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக் காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான் தோப்பு, கீரீக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்த நகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம் பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழ்வயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
- ஒரு கட்டத்தில் மீராஜாஸ்மின் அவரை பிரிந்தார்.
- கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருச்சி:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி கலாவதி. இந்த தம்பதியருக்கு மீராஜாஸ்மின் (வயது 22)என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். குழந்தைகளின் கல்விக்காக அந்தோணிசாமி திருச்சி வயலூர் சாலை சீனிவாச நகர் 5-வது குறுக்கு பிரதான சாலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
தற்போது அந்தோணிசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மீரா ஜாஸ்மின் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார். அதன் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.எஸ்.சி முடித்தார். பல்கலைக்கழக தேர்விலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் தனது தாயாரிடம் வேலை தேடிச் செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மகள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் தாயார் கலாவதி அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.
முழுமையாக ரிங்க் போய் கட் ஆனது. ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கலாவதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தார்.
இதற்கிடையே திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூர் சனமங்கலம் காப்புக்காடு பகுதியில் இளம்பெண் ஒருவர் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடக்கும் தகவல் வெளியானது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மீரா ஜாஸ்மின் என்பது தெரியவந்தது.
உடலின் அருகே அவரது கைப்பை, செல்போன், காலணிகள் கிடந்தன. பீர் பாட்டில்களும் கிடந்தன. உடல் பாதி நிர்வாண நிலையில் கிடந்தது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்பட்டது.
கொலை செய்யப்பட்ட மீரா ஜாஸ்மின் கல்லூரியில் படித்த போது அவருடன் ஒன்றாக படித்த தோழியின் அண்ணன் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் மீராஜாஸ்மின் அவரை பிரிந்தார். இதனால் விரக்தி அடைந்த தோழியின் அண்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதன் காரணமாக பழிக்கு பழியாக காதலனின் உறவினர்கள் அவரை கடத்திச் சென்று கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மாயமான பட்டதாரி இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சிறுகனூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டதாரி மாணவி மீரா ஜாஸ்மின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திரண்டு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது போலீஸ் அதிகாரிகள் இப்போது போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு மணி நேரத்தில் புலன் விசாரணை முடிவுகள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் என கூறினர் அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தில்லை நகர் உறையூர் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
- தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.
- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி:
திருச்சி மத்திய வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.
முறைகேடு நடந்ததா? என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை. விசாரணையில் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து காட்டுவோம்.
தி.மு.க.வை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.
தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை தி.மு.க.வின் பி.டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி அவர் வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும். ஆனால் வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், நீக்குவதையும் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.
- காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
- ஸ்ரீபெரும்புதூர், தச்சங்குறிச்சி, மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர்,
திருச்சி:
சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகர், பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை,
மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், தச்சங்குறிச்சி, மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர்,
தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், மற்றும் ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
- பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
- அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டதல்ல, வேறு யாரோ தூண்டுதலின் பேரில் நடந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் திசை திருப்ப பார்க்கிறார்களோ என்று விமர்சனமும் கூடவே எழுந்தது.
நெரிசல் சாவு பிறரால் தூண்டப்பட்டு நடத்துவது அல்ல. தன்னார்வத்தோடு வரக்கூடியவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகரிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கும்பமேளா, கர்நாடகாவில் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்வு, ஆந்திராவில் அல்லு அர்ஜுன் திரைப்படம் பார்க்க சென்றபோது அவரை பார்க்க வந்து உயிரிழப்பு சம்பவம் போன்ற பல்வேறு இடங்களில் நிகழ்ந்து இருக்கின்றன. எதற்காக அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை..
கரூர் சம்பவத்தில் இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை சொல்வதே பா.ஜ.க.வின் வாடிக்கையாக உள்ளது. கற்பனையாகவும், யூகத்தின் அடிப்படையிலும் பல செய்திகளை நயினார் நாகேந்திரன் பரப்புகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நியமித்த பிறகும் அண்ணாமலை தான் தலைவர் போன்று மனநிலையில் ஏதேதோ பேசி வருகிறார். விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு பெற்று இயங்கக்கூடிய தலைவராக இருக்கிறார்.
அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த சூழலும் இல்லை. அதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்..
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு நிறைய அனுபவம் படிப்பினை கிடைத்திருக்கிறது. அதனால் அவர் பின்னால் யாரும் வர வேண்டாம். தொண்டர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது தவறில்லை. கரூர் சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது குறித்து நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்.
அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணி ஏற்படும் என்பது அ.தி.மு.க. தரப்பில் பரப்பப்படும் வதந்தி. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு த.வெ.க.வோடு கூட்டணி வைக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறார்களா?. அவ்வாறு அமைந்தால் அ.தி.மு.கவின் நம்பகத்தன்மை போய்விடும்.
அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.
- யாரை பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.
திருச்சி:
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும் போது,
தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது, முறையான நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் 8 பாஜக எம்.பி.க்கள் உடனடியாக தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழகத்திற்கான எந்த பிரச்சனைகளுக்கும் பா.ஜ.க. குரல் கொடுக்கவில்லை,
முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். யாரை பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.
வேண்டுமென்றே பிரச்சனை உண்டு செய்வதற்காக பா.ஜ.க. இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
- விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம்.
- விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார்.
திருச்சி:
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும். அது நடைமுறைக்கு வந்தால்தான் இளம் தலைமுறையை காப்பாற்ற முடியும். அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளில் இளைஞர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் போதையில் பங்கேற்பதை நானே கவனித்து இருக்கிறேன்.
த.வெ.க. தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு, காவல்துறை அஞ்சுகிறதா? த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும்.
விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை எனில் ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும்?
விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு காரணம் என்ன? திமுக-தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா? விஜய் மீது வழக்குபதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்? ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பி விடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசி உள்ளார்.
மூன்று நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்எஸ்எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. விஜய்யை சுற்றி இருக்கும் அனைவரும் பா.ஜ.க. பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். திமுக கூட்டணிக்கான சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் மூலம் பிரிப்பதே பாஜகவின் திட்டம். பாஜக-அதிமுக கூட்டணியில் கண்டிப்பாக விஜய்யை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். கரூர் துயர சம்பவத்தில் விஜய்யை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது.
விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம். விஜய்யின் கொள்கை எதிரியான பாஜகவே அவரை பாதுகாக்க முயற்சிக்கிறது. பாஜக பாதுகாக்க முயல்வதன் மூலம் விஜய்யின் சாயம் வெளுத்துப் போய்விட்டது.
அண்ணா ஹசாரே போன்று விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. விஜய்யை பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு வர பாஜக முயல்கிறது.
தமிழக அரசு, காவல் துறைதான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட ஆட்சி நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது. இப்படியெல்லாம் மடைமாற்றம் செய்ய பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜய்யால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. குற்றவுணர்வே இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது விஜய் பழிபோட முயற்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






