search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் பாழடைந்த கழிவறையை சீரமைக்க கோரிக்கை

    • 1300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தர வேண்டும்

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் முஸ்லிம் முன்னணி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பள்ளியில் சுகாதார சீர்கேடு மற்றும் பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மாணவர்களுக்கு இடையே ஏற்படும் கோஷ்டி மோதலை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும். நிரந்தரமான தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தர வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த கோரிக்கை மனுவை முஸ்லிம் முன்னணி கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் மஜீத் வழங்கினார். மாவட்ட பொருளாளர் மெகபூப் பாட்ஷா, மாவட்ட துணைத்தலைவர் ஹக்கீம், மாவட்ட மருத்துவ அணியைச் சேர்ந்த பாபு, தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி ரபீக், மங்கலம் ஒன்றிய தலைவர் இஸ்மாயில் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் ,

    பள்ளி கழிப்பறையில் பயன்படுத்திய புகையிலை பாக்கெட்டுகளை காண முடிகிறது. பள்ளியின் வகுப்பறை சுவற்றிற்கு வெளியே ஆபாச வார்த்தைகளை எழுதியிருப்பதையும் காண முடிகிறது.

    ஆகவே பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×