search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின்: மேல் முறையீடு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
    X

    கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின்: மேல் முறையீடு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

    • அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
    • இதே வழக்கில் கடந்த ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. அவரை கைது செய்தது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் 10-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் ஜூன் 2-ம் தேதி திகார் ஜெயிலில் சரணடைந்தார்.

    இதற்கிடையே கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அவர் சிறையில் இருந்து வெளியே வரும் நிலையில் இதே வழக்கில் கடந்த ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. அவரை கைது செய்தது.

    சி.பி.ஐ. வழக்கில் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுமீது பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் கருத்துக்களை பெறாமல் உடனடியாக இடைக்கால ஜாமின் வழங்கமுடியாது என நீதிபதிகள் தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

    இந்நிலையில், கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் கெஜ்ரிவால் பெயர் இல்லை. அவரை கைதுசெய்ததற்கு எவ்வித ஆதாரமோ, முகாந்திரமோ இல்லை.

    கடந்த 2 ஆண்டாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் பெற்ற பிறகு சி.பி.ஐ. திட்டமிட்டு அவரை கைதுசெய்தது. கைது செய்வதற்கு முன் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை.

    அவர் எந்த அச்சுறுத்தலிலும் ஈடுபடமாட்டார். அவர் ஒரு அரசியலமைப்பு செயற்பாட்டாளர். எனவே கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க வேண்டும்.இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்டோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார். ஆனால், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×