என் மலர்tooltip icon

    இந்தியா

    களத்தில் வெல்லப்போவது கார்கேவா, சசி தரூரா? காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்
    X

    மல்லிகார்ஜூன கார்கே - சசி தரூர்

    களத்தில் வெல்லப்போவது கார்கேவா, சசி தரூரா? காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்

    • காங்கிரஸ் கட்சி தனது 137 ஆண்டு கால வரலாற்றில், தலைவர் பதவிக்கு 6-வது முறையாக உள்கட்சி தேர்தலை சந்திக்கிறது.
    • நேரு-காந்தி குடும்பத்திடம் இருந்து காங்கிரஸ் தலைவர் நாற்காலி வெளியே செல்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சிக்கு வயது 137. இந்த நெடிய பயணத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டிருப்பது இது 6-வது முறை ஆகும்.

    இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. 24 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறார்.

    இன்றைய தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் என இருவர் களத்தில் நின்றாலும், யார் வெற்றி பெற்றாலும் அவர் தென் மாநிலத்தவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். மல்லிகார்ஜூன கார்கே, நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தை சேர்ந்த மூத்த தலைவர். அதே போன்று சசி தரூர் மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர் ஆவார்.

    137 ஆண்டு கால காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வயது 80. சசி தரூருக்கு வயது 66.

    9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் பிரதிநிதிகள் ஓட்டு போட்டு, இவர்களில் ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்போகிறார்கள்.

    இதற்கான வாக்குப்பதிவு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் சென்னை சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைமையகங்களிலும் இன்று நடக்கிறது.

    மல்லிகார்ஜூன கார்கேயும் சரி, சசி தரூரும் சரி இருவருமே, இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பம் நடுநிலை வகிக்கிறது, என்கிறார்கள்.

    ஆனாலும் மல்லிகார்ஜூன கார்கே, நேரு குடும்பத்தின் ஆதரவு வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். சசி தரூர், ஐ.நா. சபையின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விட்டு காங்கிரசில் சேர்ந்து அரசியல் களத்தில் குதித்தவர். அதனால்தானோ என்னவோ அவர் தன்னை மாற்றத்துக்கான வேட்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

    இந்த தேர்தலின் முக்கியத்துவம் என்று எதைச்சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த விரிவான பதில் இது-

    "காங்கிரஸ் கட்சி தனது 137 ஆண்டு கால வரலாற்றில், தலைவர் பதவிக்கு 6-வது முறையாக உள்கட்சி தேர்தலை சந்திக்கிறது.

    ஊடகங்கள் 1939, 1950, 1997, 2000 ஆகிய 4 தேர்தல்களை முக்கியமாக காட்டுகின்றன. ஆனால், 1977-ம் ஆண்டும் தேர்தல் நடந்தது. அதில் பிரமானந்த ரெட்டி தலைவர் ஆனார்.

    பொதுவாகவே எப்போதுமே இத்தகைய பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் 'ஒருமித்த கருத்து மாடல்' என்பதில் நான் நம்பிக்கை வைத்து வந்துள்ளேன். நேருவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்த அணுகுமுறையில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தவர் காமராஜர்தான்.

    என்னைப் பொறுத்தமட்டில், அமைப்பு தேர்தல்கள், உள்ளபடியே கட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்பதில் பெரிதான நம்பிக்கை இல்லை. தனிப்பட்ட நோக்கங்களை வேண்டுமானால் அது நிறைவேற்றலாம். ஆனால் ஒரு கூட்டுணர்வை உருவாக்குவதில் அவற்றின் மதிப்பு சந்தேகத்துக்கு உரியதுதான். ஆனாலும் கூட தேர்தல்கள் நடப்பது ஒரு விதத்தில் குறிப்பிடத்தக்கதுதான்.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்துடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தல் அமைப்பு ரீதியில் முக்கியத்துவம் குறைந்ததுதான். இந்த இந்திய ஒற்றுமை நடைபயணம், காங்கிரசுக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் 1992-96 ஆண்டுகளில் நரசிம்மராவ் தலைவராக இருந்தார். அதன் பின்னர் சீதாராம் கேசரி தலைவர் பதவிக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து 1998-ல் காங்கிரஸ் தலைவர் ஆனவர் சோனியா காந்தி. 2017 வரை அவர் நீடித்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ராகுல் காந்தி தலைவர் ஆனார். 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அவர் பதவி விலக, மீண்டும் சோனியா காந்தி தலைவர் பதவிக்கு வந்தார்.

    இப்போது மீண்டும் நேரு-காந்தி குடும்பத்திடம் இருந்து காங்கிரஸ் தலைவர் நாற்காலி வெளியே செல்கிறது. அந்த நாற்காலியில் அமரப்போகிறவர் மல்லிகார்ஜூன கார்கேவா அல்லது சசி தரூரா, அவர்கள் எத்தனை காலம் அந்த பதவியை அலங்கரிப்பார்கள். அறிவதற்கு வரலாறு ஆவலாய் காத்திருக்கிறது.

    Next Story
    ×