search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இதெல்லாம் மோடி அரசால் கடைபிடிக்கப்படவில்லை: துணை சபாநாயகர் பதவி குறித்து சரத் பவார் பதில்
    X

    இதெல்லாம் மோடி அரசால் கடைபிடிக்கப்படவில்லை: துணை சபாநாயகர் பதவி குறித்து சரத் பவார் பதில்

    • பொதுவாக துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கு வழங்கப்படுவது வழக்கம்.
    • கடந்த முறை மோடி அரசு தனி மெஜாரிட்டி பெற்றபோதிலும் துணை சபாநாயகர் பதவியை வழங்க மறுத்துவிட்டது.

    மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க பாஜக விரும்பவில்லை. துணை சபாநாயகர் பதவியையும் வைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிகிறது.

    பாராளுமன்ற வழக்கப்படி ஆளுங்கட்சி அல்லது கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார். துணை சபாநாயகர் எதிர்க்கட்சியை சேர்ந்த நபருக்கு வழங்கப்படும்.

    ஆனால் பாஜக கடந்த முறை 2-வதாக ஆட்சி அமைக்கும்போது துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை.

    இந்த முறை கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதாலும், எதிர்க்கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாலும் துணை சபாநாயகர் பதவியை கேட்டு வலியுறுத்துவோம் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சரத் பவாரிடம் துணை சபாநாயகர் பதவி கேட்டு வலியுறுத்துவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு "இந்த விதிமுறை கடந்த மோடி அரசால் கடைபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். ஆனால், நல்ல பதில் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.

    மேலும், எதிர்கட்சி தலைவர் பதவி குறித்த கேள்விக்கு "முன்னதாகவே அதிக இடங்களை பிடிக்கும் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவது தொடர்பாக ஒப்புக்கொண்டோம். அதனால் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி முடிவு செய்யும்" என்றார்.

    மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 99 இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் வாய்ப்பு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 100 ஆக உள்ளது.

    Next Story
    ×