என் மலர்
இந்தியா

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: ராகுல் காந்தி பேட்டி
- காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்களுடனான தொடர்பு பலவீனமாக இருக்கிறது.
- மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த பாதயாத்திரை நல்ல முதல்படியாக இருக்கும்.
ஐதராபாத் :
தெலுங்கானாவில் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அங்குள்ள கொத்தூர் என்ற இடத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
குஜராத்தில் காங்கிரசுக்கு திடமான அடித்தளம் உள்ளது. அங்கு பா.ஜனதாவுக்கு எதிராக அதிருப்தி அலை பலமாக இருக்கிறது. ஆம் ஆத்மியை பற்றி ஊடகங்கள், ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டன. ஆனால் அக்கட்சி காற்றில்தான் இருக்கிறதே தவிர, களத்தில் இல்லை.
எனவே, குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அங்கு நான் பிரசாரம் செய்வது பற்றி மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார். தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் ஊழல், அணுகுமுறை ஆகியவை எங்களுக்கு ஏற்புடையது அல்ல. ஆகவே, அக்கட்சியுடன் கூட்டணி கிடையாது.
காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்களுடனான தொடர்பு பலவீனமாக இருக்கிறது. மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த பாதயாத்திரை நல்ல முதல்படியாக இருக்கும். ஆனால் இது மந்திரக்கோல் அல்ல. குஜராத் தொங்கு பால விபத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






