search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரன்ஸ் பிஷ்னோய் குழு
    X

    நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரன்ஸ் பிஷ்னோய் குழு

    • சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
    • லாரன்ஸ் பிஷ்னோய் குழு சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.

    நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    லாரன்ஸ் பிஷ்னோய் குழுவால் முன்னாள் அமைச்சர் படுகொலை செய்யப்பட்டதே சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை தான் என்று கூறப்பட்டது. கடந்த 1998 ஆம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வகை கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது. கருப்பு மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.

    இந்த வரிசையில் தான் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது.

    அந்த செய்தியில், "இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கானின் நிலை இந்த விவகாரத்தில் பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்.

    சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக மும்பை காவல் துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.

    Next Story
    ×