search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாலத்தீவு அமைச்சரின் சர்ச்சை பதிவு ; லட்ச தீவுக்கு ஆதரவாக களமிறங்கும் திரை பிரபலங்கள்
    X

    மாலத்தீவு அமைச்சரின் சர்ச்சை பதிவு ; லட்ச தீவுக்கு ஆதரவாக களமிறங்கும் திரை பிரபலங்கள்

    • பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு வந்து சென்றதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சரின் எக்ஸ் பக்க பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது
    • மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் திரை பிரபலங்கள்

    இந்தியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை புகைப்படங்களுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து, இந்தியா மாலத்தீவை குறிவைத்துள்ளது என சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர் பதிவிட்டிருந்தார்.

    இதன் எதிரொலியாக, திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டுக்கு இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அவர்களிடம் நல்லவர்களாக இருக்கிறோம். அதேசமயம் இப்படியான வெறுப்பை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? என பதிவிட்டிருந்தார். மேலும், நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதன் அழகை வியந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால், கண்ணியம் மிகவும் முக்கியமானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்" என தெரிவித்திருந்தார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "சிந்துதுர்க் பகுதியில் எனது 50வது பிறந்தநாளை கொண்டாடி 250 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாம் கேட்பதை விட அதிகமாக கொடுக்கக்கூடியது இந்த கடல் நகரம். அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்துச் செல்லும். இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்

    நடிகர் சல்மான் கான், "லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், அது இந்தியாவில் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

    நடிகை ஷ்ரத்தா கபூர், "பழமையான அழகிய கடற்கரையையும், உள்ளூர் கலாசாரத்தையும் உள்ளடக்கிய லட்சத்தீவில் எனது விடுமுறை நாட்களை செலவழிக்க ஆவலாக உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×