search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வயநாடு தொகுதி இடைத்தேர்தல்... பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்
    X

    வயநாடு தொகுதி இடைத்தேர்தல்... பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்

    • வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.
    • பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

    அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த 15-ந்தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும், பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். இதற்காக அவர் இன்று கேரளா வருகிறார். நாளை (23-ந்தேதி) வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அவர், பின்பு பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

    அவர் வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. அப்போது பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வர இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×