search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    tripura floods
    X

    தொடர் கனமழை, நிலச்சரிவு.. 22 பேர் உயிரிழப்பு.. திரிபுராவுக்கு ரூ. 40 கோடி விடுவித்த மத்திய அரசு

    • திரிபுரா மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
    • கனமழை, நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு.

    திரிபுரா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக விடாமல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திரிபுரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

    தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி திரிபுராவில் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 17 லட்சம் பேர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள 450 நிவாரண முகாம்களில் சுமார் 65 ஆயிரத்து 500 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


    இந்நிலையில், திரிபுரா மாநிலத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ. 40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.

    அதில், "திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் பங்கு ரூ.40 கோடியை முன்பணமாக விடுவிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது."



    "வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 11 குழுக்கள், ராணுவம் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்திய விமானப் படைக்கு சொந்தமான நான்கு ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன."

    "திரிபுராவில் உள்ள நம் சகோதர, சகோதரிகள் இத்தகைய கடினமான காலக்கட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அவர்களுக்கு தோளோடு தோள் நின்று போராடுவதைக் காண்பீர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×