search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மசோதா விவகாரம்: கேரள ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?- சுப்ரீம் கோர்ட் கேள்வி
    X

    மசோதா விவகாரம்: கேரள ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?- சுப்ரீம் கோர்ட் கேள்வி

    • 9 மசோதா குறித்து ஆளுநர் முடிவு எடுதுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • முதலமைச்சர்கள், மந்திரிகளுடன் ஆளுநர் சந்தித்து சட்டம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

    பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களில், ஆளுநர்களுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. மேற்கு வங்காளம், டெல்லி, பஞ்சாப், கேரளா மற்றும் தமிழகம் இதில் அடங்கும்.

    பஞ்சாப் மாநிலம் முதல்முதலாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. பின்னர் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

    பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு விசாணையின்போது, "ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்படும் சட்டத்தை, ஆளுநர்களால் தடுத்து நிறுத்த முடியாது" என உச்சநீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்தது. இது எல்லா மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் கேரள மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 7 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும், நிதி மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்து இருப்பதாகவும் கேரள மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது ஆளுநர் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரலும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் "கேரள மாநில அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இரண்டு வருடங்களாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்" என கேள்வி எழுப்பியது.

    அதற்கு நான் இங்கு விரிவாக செல்ல விரும்பவில்லை. அது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். அதற்கு "நாங்கள் அதில் ஈடுபடுவோம், அது அரசியலமைப்பிற்கு எங்களுடைய பொறுப்பு பற்றியது. மேலும், மக்கள் இதுகுறித்து எங்களிடம் கேட்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் பொறுப்பு அமைச்சர் இருவரிடமும் ஆளுநர் விவாதிப்பார் என்பதை பதிவு செய்வோம். சில அரசியல் சாமர்த்தியத்தால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம், இல்லையெனில், நாங்கள் சட்டத்தை வகுத்து, அரசியலமைப்பின் கீழ் எங்கள் கடமையைச் செய்வோம்" என பெஞ்ச் பதில் அளித்தது.

    மேலும், கூடுதல் கோரிக்கைகளுடன் மனுத்தாக்கல் செய்ய கேரள அரசு அனுமதி கோரியது. இதற்கு அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேரள அரசு திருத்திய மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்தனர்.

    மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதன் மூலம், ஆளுநர் மசோதா மீது முடிவு எடுப்பது தொடர்பான விசயத்தில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பதி வைத்ததன் மூலம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடிவு செய்தோம். இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை வகுப்பதை கருத்தில் கொண்டு, நிலுவையில் வைப்பதாக பின்னர் முடிவு செய்தோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×