search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரிஜ் பூஷனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் வீராங்கனைகளின் பாதுகாப்பு வாபஸ் - வினேஷ் போகத் சாடல்
    X

    பிரிஜ் பூஷனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் வீராங்கனைகளின் பாதுகாப்பு வாபஸ் - வினேஷ் போகத் சாடல்

    • தங்களது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக வீராங்கனைகளும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
    • இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து டெல்லி துணை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த வருடத்தின் தொடக்கம் முதல் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

    குறிப்பாக பஜ்ரங் புனியா தனது பத்ம ஸ்ரீ விருதை மோடியின் இல்லத்தின் முன் இருந்த சாலையில் வைத்துவிட்டுச் சென்றது பரபரப்பைக் கிளப்பியது. போராட்டத்தை ஒடுக்க அரசு கடுமையான முறைகளைப் பிரயோகித்தது. ஆனாலும் வீராங்கனைகள் விடாப்பிடியாக போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது.

    பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பிரிஜ் பூஷன் மீது பதியப்பட்ட கிரிமினல் வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பிரிஜ் பூஷனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க இருந்த பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பை டெல்லி போலீஸ் வாபஸ் பெற்றுள்ளதாக வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் தங்களது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக வீராங்கனைகளும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து இருந்து வாபஸ் பெற்ற பாதுகாப்பை உடனடியாக மீண்டும் வீராங்கனைகளுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து டெல்லி துணை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பை வாபஸ் பெறவில்லை என்று டெல்லி போலீஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×