search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் குளறுபடி .. இன்ஜினீயர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த யோகி
    X

    அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் குளறுபடி .. இன்ஜினீயர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த யோகி

    • அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சம்பவங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
    • கோவில்கள் பாஜக கொள்ளையடிப்பதற்கான இடங்களாக மாறிவிட்டன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் மத்திய பாஜக அரசால் பிரமாண்டமான முறையில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கோவிலின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    ஆனால் அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சம்பவங்கள் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தனது துப்பாக்கியை கையாளும்போது தவறுதலாக அது வெடித்ததால் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

    இந்நிலையில் தற்போது ரூ.1800கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் மழை காரணமாக கருவரை உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    மேலும் மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான பாதாள சாக்கடை கட்டுமானம் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றமசாட்டியுள்ள்ளது மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    மேலும் கோவிலுக்கு செல்லும் 14 கிலோமீட்டர் நீளம் கொண்ட பிரதான ராம் பாத் சாலையில் பொத்தல்கள் ஏற்பட்டு மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில்தான் தற்போது, யோகி ஆதித்தனாத் அரசு மூன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

    இதற்கிடையில் இந்த குற்றச்சாட்டுகள் ராமர் கோவில் கட்டுமானம் என்று பெயரில் பாஜக செய்துள்ள மிகப்பெரிய ஊழலையே காட்டுவதாகவும், கோவில்கள் பாஜக கொள்ளையடிப்பதற்கான இடங்களாக மாறிவிட்டன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன.

    Next Story
    ×