search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
    X

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

    • இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது.
    • லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    ஹூலுன்பியர்:

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று ஜப்பானை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய வீரர்கள் முதல் 3 நிமிடங்களுக்குள் 2 கோல் (சுக்ஜீத் சிங், அபிஷேக்) கோல் போட்டு மிரள வைத்தனர்.

    இதனால் இந்தியாவின் தாக்குதல் யுக்தியை சமாளிக்க ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனாலும் இந்திய வீரர்களின் கோல் மழை ஓயவில்லை. 17-வது நிமிடத்தில் சஞ்சய், 54-வது நிமிடத்தில் உத்தம்சிங், 60-வது நிமிடத்தில் மறுபடியும் சுக்ஜீத் சிங் கோல் அடித்தனர். இதற்கிடையே ஜப்பான் தரப்பில் மோட்சுமோட்டோ 41-வது நிமிடத்தில் கோல் திருப்பினார்.

    முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்து 2-வது வெற்றியை பெற்றது. ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் அபிஷேக் கூறுகையில், 'இது அணியின் முழுமையான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு, இலக்கை சரியாக எட்டினோம். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டார்.

    மற்றொரு ஆட்டத்தில் சீனா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பதம் பார்த்தது. பாகிஸ்தான்- தென்கொரியா இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

    போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இதே மலேசியாவை வீழ்த்தி இருந்தது நினைவு கூரத்தக்கது.

    Next Story
    ×