என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- ஆஸ்திரேலியா போட்டிக்கு புதிய ஆடுகளம்

- சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது.
- லீக் சுற்றில் இந்திய அணி துபாய் மைதானத்தில் 3 போட்டியிலும் வெவ்வேறு ஆடுகளத்தில் விளையாடியது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்தது. இதையடுத்து இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா, ஒரே மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாக உள்ளது என்று முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சனம் செய்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்தார். அவர் கூறும்போது, எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை. இங்கே 4-5 ஆடுகளங்கள் இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான தன்மையை கொண்டிருக்கும். அது எப்படி விளையாடும் என்பது எங்களுக்குத் தெரியாது என்றார்.
இந்த நிலையில் துபாயில் இன்று மதியம் தொடங்கும் முதல் அரைஇறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி துபாய் மைதானத்தில் 3 போட்டியிலும் வெவ்வேறு ஆடுகளத்தில் விளையாடியது. இந்த நிலையில் அரைஇறுதிப்போட்டிக்கு புதிய ஆடுகளம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் மைதான ஆடுகளங்களின் கண்காணிப்பாளரான மேத்யூ சாண்டரி, ஆடுகளத்தை மெதுவாகவும் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாகவும் இருக்கும் டிராக்குகளை அமைத்துள்ளார்.