search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    யானைகள் நடமாட்டத்தால் கொடைக்கானல் வனத்துறை சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடல்
    X

    யானைகள் நடமாட்டத்தால் கொடைக்கானல் வனத்துறை சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடல்

    • மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின.
    • வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர்பாய்ண்ட், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

    கடந்த 11ந் தேதி காட்டு யானைகள் பேரிஜம் வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் உள்ள தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தாலும் பேரிஜம் வனப்பகுதியில் கடந்த 8 நாட்களாக சுற்றித்திரியும் யானைகளை விரட்ட முடியவில்லை. 1 வாரமாக முகாமிட்டுள்ள யானைகளால் வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின. இன்று காலையில் கடைக்கு வந்த வியாபாரிகள் கடை சேதமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடைகளை சேதப்படுத்தியது யானைகள் தான் என உறுதி செய்தனர்.

    வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் தற்போது வியாபார கடைகளையும் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனால் வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதனிடையே வனத்துறையினர் யானைகளை கண்காணித்து விரைந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×