என் மலர்
திண்டுக்கல்
- வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
- தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து.
சின்னாளபட்டி:
100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்திற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் கடந்த 4 மாதமாக வழங்க வேண்டிய ரூ.4039 கோடியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இதனால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. கிராமப்புற பெண்கள் இத்தொழில் மூலம் சுய சார்பு நிலையை அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ.240 முதல் ரூ.270 வரை சம்பளம் கிடைக்கிறது. வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
தமிழகத்திற்கு இதேபோல் கல்வி நிதியை வழங்காமலும், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தும் துறை சார்ந்த அமைச்சருக்கு மனு அளித்தும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் பிரதமர் மோடியின் செவிகளுக்கு விழும்வரை எங்களது போராட்டம் தொடரும்.
நிதியை விரைவில் ஒதுக்காவிட்டால் எங்களது அடுத்தகட்ட போராட்டமும் தொடரும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் மீடியா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுககு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் விஜய் கூறியதைபோல தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. மன்னர் ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது. மக்கள் வாக்களித்து அவர்களுக்காக செயல்படும் திராவிட மாடல் அரசாக தி.மு.க. விளக்கி வருகிறது. தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு யாரும் போட்டி கிடையாது. மக்கள் ஆதரவுடன் மீண்டும் வருகிற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
- புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.
திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களது கொள்கை. அதை வைத்துத்தான் கூட்டணிகள் அமைய வேண்டும்.
வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஆட்சி பகிர்வு என்ற லட்சியத்தோடு, அந்த குறிக்கோளோடுதான் ஆட்சி மாற்றங்கள் நடைபெற வேண்டும்.
புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 முதல் மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
- நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும்.
பழனி:
இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்வு தெரியாது என்பதால் நாளை பழனி முருகன் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வானியல் நிகழ்வுகளில் கிரகணங்கள், கிரகண காலங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வகையில் நாளை (29-ந் தேதி) இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும்போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது குறிப்பிட்ட நேரத்துக்கு பழனி முருகன் கோவிலில் அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
கிரகணம் முடிந்து பரிகார பூஜைகளுக்கு பின்னே கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உப கோவில்களான திருஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 5 பேர் சிவராஜை சரமாரியாக தாக்கி மது பாட்டிலை உடைத்து குத்தினர்.
- டீசல் ஊற்றி எரித்து 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கால் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 60). இவர் பெரும்பள்ளம் பகுதியில் சொந்தமாக தங்கும் விடுதி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.
மது பழக்கத்துக்கு அடிமையான சிவராஜை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மதுரை அழகர் கோவில் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராஜை அவரது சகோதரி சாந்தி அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்து வந்தார்.
அதன் பின் சிவராஜ் வீட்டுக்கு செல்லாமல் தனது விடுதி அறையிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் சிவராஜூக்கும் மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த மதுரை தத்தனேரியைச் சேர்ந்த மணிகண்டன் (29), அருண், ஜோசப், சந்தோஷ், நாகசரத் ஆகியோருக்கும் இடையே தொடர்ந்து நட்பு ஏற்பட்டது.
அவர்கள் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில் சிவராஜின் விடுதிக்கு கடந்த வாரம் வந்துள்ளனர். மறு வாழ்வு மையத்தில் இருந்து போதையில் இருந்து மீண்ட அவர்கள் மீண்டும் ஒன்றாக மது குடித்ததாக தெரிகிறது.
பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில் சிவராஜிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் 5 பேரும் சிவராஜை சரமாரியாக தாக்கியதுடன் மது பாட்டிலை உடைத்து குத்தினர்.
படுகாயமடைந்த சிவராஜை அருகில் இருந்த பயர் கேம்ப்பில் வைத்து டீசல் ஊற்றி எரித்தனர். பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு அனைவரும் தப்பிச் சென்றனர்.
இதனிடையே சிவராஜ் மாயமானது குறித்து அவரது சகோதரி சாந்தி கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், அவருடன் தங்கி இருந்த 4 பேர் மாயமானதை அறிந்த போலீசார் அவர்களின் விபரத்தைக் கேட்டனர்.
மேலும் சிவராஜ் தங்கி இருந்த அறையில் ரத்தக்கறை இருந்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடலை தேடிய போது பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டனர். அந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விடுதியில் இருந்து தப்பிச் சென்ற மணிகண்டன் தாங்கள் சிவராஜை தாக்கி கொலை செய்தது குறித்து மறுவாழ்வு மைய நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மணிகண்டனை அவர்கள் கைது செய்தனர். கொடைக்கானல் போலீசாரும் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். குடிபோதையில் இந்த கொலை நடந்ததா? அல்லது விடுதியை அபகரிக்கும் நோக்கில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மறு வாழ்வு மையத்தில் ஏற்பட்ட பழக்கம் கொலையில் முடிந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார்.
- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் சங்கரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். அப்போது திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால் ரெயில் அந்த பகுதியில் மெதுவாக சென்றது. அதை பயன்படுத்திக் கொண்ட ஒரு வாலிபர் சங்கரி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட சங்கரி சங்கிலியை பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.
இருந்த போதும் பாதி அறுந்த சங்கிலியுடன் அந்த வாலிபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். அதேபோல் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த செல்வி (வயது 55) 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு சென்றார். அந்த ரெயில் அம்பாதுரை அருகே மெதுவாக சென்றபோது அவர் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்கள் தொடர்பாக இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சக்திவேல் பயணிகளிடம் நகை பறித்தது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் அவர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தலைமறைவானார். இதையடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருணோதயம் ஆகியோர் சக்திவேலை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் மீண்டும் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் மூலம் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அய்யலூர் ஆட்டுச்சந்தை சாலையிலேயே நடப்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- சந்தைக்கு வரும் வியாபாரிகளை குறிவைத்து சூதாட்ட கும்பலும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆடுகள் மட்டுமின்றி கோழிகள், கட்டுச் சேவல்கள் கண்வலிக்கிழங்கு, பழு பாவற்காய், சீத்தாபழம் உள்ளிட்ட அரியவகை காய்கறிகளும் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 8 மணிவரை சந்தை நடைபெறும்.
திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அய்யலூர் சந்தைக்கு விற்பனைக்கு ஆடுகளை கொண்டு வருவார்கள். தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு நோன்பு வைத்துள்ள நிலையில் தற்போதே வியாபாரிகள் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இன்று 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.7000 வரை விற்பனை ஆனது. தரமான நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.400ம், கட்டுச் சேவல்கள் ரூ.3500 முதல் ரூ.7000 வரை விற்பனையானது. தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை குறைந்த போதும் வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
அய்யலூர் ஆட்டுச்சந்தை சாலையிலேயே நடப்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சந்தை நடத்தும் உரிமையாளர் வசூலில் மட்டுமே தீவிரம் காட்டி வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலை கண்டு கொள்வதில்லை. எனவே சந்தையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வாரச்சந்தையில் போதிய மின்விளக்கு, குடிநீர், கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் வேதனை அடைகின்றனர். வருடத்திற்கு சுமார் ரூ.80 கோடிக்கு விற்பனையாகும் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் அடிக்கடி திருட்டுச் சம்பவங்களும் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.
மேலும் சந்தைக்கு வரும் வியாபாரிகளை குறிவைத்து சூதாட்ட கும்பலும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பங்குனி திருவிழா மற்றும் ரம்ஜான் பண்டிகைக்காக ஆடுகள், கோழிகள், சேவல் விற்பனையாகி வரும் நிலையில் விவசாயிகள், வியாபாரிகள் பல்வேறு குறைபாடுகளை கூறி நொந்து செல்லும் நிலையிலேயே உள்ளனர்.
- செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
- செல்வமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர்.
அப்போது, செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.
பிறகு, செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், செல்வமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
- பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
- கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ராஜா தலைமை தாங்கினார். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 வீதம் 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,ஆவின் கலப்பு தீவனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தீர்ப்பின்படி ஆரம்ப சங்கங்களில் இருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதே போல் பழனி தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ராமப்பட்டினம் புதூர், கன்னிவாடி, வேடசந்தூர் புது ரோடு, குஜிலியம்பாறை ஆனைப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு, திண்டுக்கல் அரசனம்பட்டி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- முறைகேடு செய்து ஈட்டியதா என்று விசாரணை.
திண்டுக்கல்:
டெல்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் நேற்று திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி ரெயில்வே எஸ்.பி. ராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன் கொண்ட போலீசார் அந்த ரெயிலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 48) என்பவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில் ரூ.13 லட்சத்து 77 ஆயிரத்தி 900 பணம் இருந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது தான் வெளிநாட்டு பணத்தை மாற்றி தரும் பணியில் இருப்பதாகவும், அதற்காக கமிசன் பெற்று வருவதாகவும் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்த பணத்தை தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை.
இதனையடுத்து அந்த பணத்தை திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் நவநீத கிருஷ்ணனை கைது செய்து இந்த பணம் உண்மையிலேயே வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்ததா? அல்லது முறைகேடு செய்து ஈட்டியதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது.
- மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
பழனி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பழனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது 5000 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வரவேற்கத்தக்கது. இதே போல் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்பது உள்பட பல அறிவிப்புகளை தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 2006ம் ஆண்டே விஜயகாந்த் வெளியிட்டார்.
அதனை தற்போது தமிழக அரசு செயல்படுத்த முயற்சி எடுத்ததற்கு நன்றி. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போல் பொத்தாம்பொதுவாக கூறாமல் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெயர் பலகை மற்றும் பணம் வசூலிக்கும் கவுண்டர்களை அடித்து நொறுக்கினர்.
- சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டு பைபாஸ் வழியே சேவுகம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து 4 வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொடைரோடு, நத்தம் பகுதியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டமும் நடத்தி வந்தனர்.
ஆனால் 4 வழிச்சாலைகள் அமைக்காமல் இருவழிச்சாலை மட்டும் முடிந்த நிலையில் சுங்கச்சாவடி இன்று காலை 10 மணிமுதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 7 இடங்களில் பணம் வசூலிப்பதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ஊழியர்களுக்கான அறை மற்றும் கணினிகள் கொண்டு வரப்பட்டன.
ஆனால் சுங்கச்சாவடி திறக்கும் முன்பு காலை 9 மணிக்கு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். இதனால் நள்ளிரவு 12 மணிக்கே சுங்கச்சாவடி திறக்கப்பட்டு வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
அதிகாலையில் இத்தகவல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்து சுங்கச்சாவடி நோக்கி வந்தனர். அவர்கள் அங்கிருந்த பெயர் பலகை மற்றும் பணம் வசூலிக்கும் கவுண்டர்களை அடித்து நொறுக்கினர்.
இதனை தடுக்க வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருசிலருக்கு மண்டை உடைந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லேப்டாப்களையும் அடித்து நொறுக்கியதுடன், மேலும் பல லேப்டாப்களை தூக்கிச் சென்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அலுவலர் சுமதி ஆகியோரும் அங்கு வந்து பார்வையிட்டனர்.
சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து கேட்டறிந்ததுடன் உள்ளூர் மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் 4 வழிச்சாலை பணிகளை முழுமையாக நிறைவேற்றாமல் சுங்கச்சாவடியை திறக்க கூடாது. உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இருந்தபோதும் நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்பட்ட சுங்கச்சாவடி முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டதால் தற்போது வாகனங்கள் வழக்கம்போல் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டன.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிரா உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
- திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
- கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் வெயில் அதிகரித்த நிலையில் நேற்று அதிகாலையில் சாரலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்தது.
தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் சிரமமடைந்தனர். பகல் பொழுதிலேயே கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேல்மலை பகுதியில் பெய்த மழை சாகுபடி பணிக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வந்தது. இதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவித்தனர். கோடைகால சீசன் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் 20, காமாட்சிபுரம் 13.2, நிலக்கோட்டை தாலுகா 17, நிலக்கோட்டை 16.20, சத்திரப்பட்டி 7.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 8.4, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 8.2, பழனி 7, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 13, பிரையண்ட் பூங்கா 14 என மாவட்டம் முழுவதும் 124.20 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.