search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
    X

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

    • கொலை வழக்கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • 3-வது குற்றவாளியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது.

    இதுதொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 10 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

    இதையடுத்து இந்த கொலை வழக்கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் தாதா அஞ்சலை, நாகேந்திரனின் மகனான இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் ஆகியோர் கைதானவர்களில் முக்கியமானவர்கள் ஆவா்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி சம்பவ செந்தில், வக்கீல் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் 5ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில் போலீசில் சிக்காமல் தலைமறைவாக உள்ள சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் உள்பட 30 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    முதல் குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 2-வது குற்றவாளியாக சம்பவ செந்தில், 3-வது குற்றவாளியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தவிர ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரின் பங்கு என்ன? என்பது பற்றியும் குற்றப்பத்திரிகையில் விரிவான தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

    ஆம்ஸ்ட்ராங்குடன் இளைஞர் காங்கிரஸ் பிரமுகரான அஸ்வத்தாமனுக்கு ஏற்பட்டிருந்த பகை, ஆற்காடு சுரேஷ் கொலையான அவரது தம்பி பொன்னை பாலுவுடன் ஏற்பட்டிருந்த முன் விரோதம், உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னை பாலு மற்றும் அவனது கூட்டாளிகள் ஓராண்டாக திட்டம் போட்டு செயல்பட்டிருந்தனர். அது தொடர்பான தகவல்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளன.

    இவர்களோடு வடசென்னையை சேர்ந்த பெண் தாதா அஞ்சலை மற்றும் ரவுடிக்கும்பலை சேர்ந்தவர்கள் செய்த பண உதவி மற்றும் ரவுடிகள் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தது போன்ற தகவல்களும் உள்ளன.

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகும் நிலையில் திட்டமிட்டபடி போலீசார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

    இதை தொடர்ந்து வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளது.

    இந்த விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் வழக்கு மீண்டும் வேகமெடுத்துள்ளது.

    Next Story
    ×