என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை-புறநகர் பகுதிகளில் பலத்த மழை: குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின.
தாழ்வான இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதேபேல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கன மழை கொட்டித் தீர்த்தது.
இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2,536 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 21 அடியில் 17.66 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,675 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 150 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 20.29 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கன அடி. இதில் 194 மி.கன அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 66 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 797 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 53 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 70 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 6 ஆயிரத்து 702 மி.கன அடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23 அடியை தொட்டதும் உபரி நீர் வெளியேற்றப்படும். தற்போது நீர்மட்டம் 21 அடியை நெருங்கி உள்ள தால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.






