search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    புழல் சிறையில் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க அமைக்கப்பட்டுள்ள புதிய அறையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தபோது எடுத்த படம்.
    X

    புழல் சிறையில் பார்வையாளர்கள் சந்திப்புக்கு புதிய நடைமுறைகள் அறிமுகம்

    • புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்க முடியும்.
    • வக்கீல்கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டு உள்ளது.

    புழல்:

    சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3,400-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் இந்த கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என 700 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் சிறை வளாகத்தில் பார்வையாளர் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. அத்துடன் கைதிகளை சந்திக்க பார்வையாளர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.

    இவற்றை தவிர்த்திட தற்போது புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சிறை கைதிகளை சந்திப்பதற்காக அரை மணிநேரம் கொண்ட 13 சுற்றுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 56 கைதிகள் பார்வையாளர்களை சந்திக்கும் வகையில் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த அட்டவணைப்படி வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை (அரசு விடுமுறை நீங்கலாக) காலை 8 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஏதேனும் 2 நாட்களில் கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.

    அத்துடன் கைதிகள் சந்திக்க வரும் பார்வையாளர்கள் வசதிக்காக முன்பதிவு முறையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 044-26590000 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கைதிகளை சந்திப்பதற்கு வசதியான நேரத்துக்கு ஒரு நாள் முன்னதாவே முன்பதிவு செய்து கொள்ளலாம். இவர்கள் பதிவு செய்த நேரத்துக்கு 45 நிமிடங்கள் முன்னதாக வந்தால் போதும்.

    இந்த புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்க முடியும்.

    இதே போல் வக்கீல்கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வக்கீல்கள் சந்திப்பு அறையில் புதிய அறைகள் அமைத்து கைதிகள், வக்கீல்களுக்கு புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 50 வக்கீல்கள் கைதிகளை சந்திக்க முடியும். இவர்களுக்கும் முன்பதிவு செய்ய தொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய நடைமுறையின்படி வக்கீல்கள் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை கைதிகளை சந்திக்கலாம். இதனால் வக்கீல்கள், கைதிகளை வழக்கு சம்பந்தமாக சந்தித்து பேச போதுமான நேரம் கிடைக்கிறது.

    புழல் சிறையில் மேம்படுத்தப்பட்ட பார்வையாளர் சந்திப்பு முறை மற்றும் புனரமைக்கப்பட்ட வக்கீல் நேர்காணல் அறையை நேற்று சிறைத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

    இதேபோல் புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பறை இசை, நாடகம், சங்கீத பயிற்சி, காட்சி கலைகள், பாட்டு கச்சேரி, கானா ஆகியவற்றை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி நிறைவு விழாவிலும் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஷ்வரர் தயாள், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், சிறைத்துறை தலைவர்(தலைமையிடம்) கனகராஜ், சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் முருசேன், தொண்டு நிறுவன நிறுவனர் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×