search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கவரப்பேட்டை ரெயில் விபத்து- 18 ரெயில்கள் ரத்து
    X

    கவரப்பேட்டை ரெயில் விபத்து- 18 ரெயில்கள் ரத்து

    • ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.

    அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் எம்இஎம்யூ ரெயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சூளூர்பேட்லை நெல்லூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யூ ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விஜயவாடா- சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×