search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பூம்புகார் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் வேலைநிறுத்தம்
    X

    மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பூம்புகார் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் வேலைநிறுத்தம்

    • எஞ்சிய 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் நேற்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர்.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை (வயது 60) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் 43 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லைதாண்டி வந்ததாக கூறி ஒரு விசைப்படகு , பைபர் 4 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் சந்திரபாடி கிராமத்தை சேர்ந்த 13 பேர் என 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் எஞ்சிய 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் நேற்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர்.

    இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை பூம்புகார் மீனவர்கள் நேற்று முதல் தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து, மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    Next Story
    ×