என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொளுத்தும் கோடை வெயில்: தொடர் விடுமுறை நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    கொளுத்தும் கோடை வெயில்: தொடர் விடுமுறை நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • தொட்டபெட்டா மலை சிகரம், லேம்ஸ்ராக் காட்சி முனை, கொடநாடு காட்சி முனைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
    • படகு சவாரி செய்து ஏரியின் ரம்மியமான இயற்கையை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்தும், எண்ணற்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கியதாகும்.

    இந்த சுற்றுலா தலங்களையும், இயற்கை காட்சிகள் மற்றும் குளு, குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    தற்போது சமவெளி பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலில் இருந்து குளு, குளு சீசனை அனுபவிப்பதற்காகவும், இதமான காலநிலையை தேடியும் சுற்றுலா பயணிகள் மலை பிரதேசங்களை நோக்கி பயணித்து வருகின்ற னர்.

    அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த மாதத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    தற்போது தமிழ்புத்தாண்டு தொடர் விடுமுறை, கோடை காலம் தொடங்கிவிட்டதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை வருகை தருகிறார்கள்.

    கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

    அவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்ட பெட்டா மலைசிகரம், சிம்ஸ்பூங்கா, நேரு பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் அங்கு மலர் கண்காட்சியையொட்டி அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மலர்களை பார்வையிட்டு, புல் தரையில் அமர்ந்து குடும்பத்துடன் பேசியும், விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர்.

    தொட்டபெட்டா மலை சிகரம், லேம்ஸ்ராக் காட்சி முனை, கொடநாடு காட்சி முனைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

    சுற்றுலா பயணிகள் காட்சிமுனைகளை பார்வையிட்டு, இயற்கை அழகினை ரசித்தபடி புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர். படகு இல்லத்தில் குவியும் சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்து ஏரியின் ரம்மியமான இயற்கையை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி, குன்னூரில் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அங்கு யானை சவாரி, வாகன சவாரி செய்கின்றனர்.

    வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று, வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு அதனுடன் செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    கோடை சீசன் தொடங்கியதையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று முதல் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

    ரெயிலில் செல்லும் போது, இயற்கை காடுகளின் அழகு, அங்கு வாழும் வனவிலங்குகள், நீர்வீழ்ச்சிகளை பார்த்தபடியே பயணிக்கும் அனுபவம் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையாக இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக சென்று வருகிறார்கள்.

    நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும், அதனையொட்டி கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×