search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஈரோடு மணல்மேடு பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம்

    • ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்கள், சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் அதிமுக சார்பில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக 20 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தி.மு.க.வுக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்தும் வகையில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

    இதற்காக ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்கள், சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் அதிமுக சார்பில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் என 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை கவரும் வகையில் அவர்கள் வித்தியாசமான முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை அதிமுக வேட்பாளர் கே .எஸ். தென்னரசு மணல்மேடு பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர் ஆகியோரும் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பொதுமக்களை கவரும் வகையில் எம்.ஜி.ஆர். வேடத்துடன் நிர்வாகிகள் சிலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×