search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனையுடன் விடுதலை- படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம்
    X

    ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனையுடன் விடுதலை- படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம்

    • காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • 2-வது முறையாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர் அந்தோணி ஆரோன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), அந்தோணி ஆரோன் உள்பட 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

    பின்னர் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 14 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அந்த மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, 14 பேரில் 12 மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் படகோட்டியான ஜான் போஸ் என்பவருக்கு அதிகபட்சமாக இலங்கை மதிப்பில் ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    அதேபோல் இரண்டாவது முறையாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர் அந்தோணி ஆரோன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் கைதாகி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வருகிற 28-ந்தேதி முதல் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் கைதானவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×