என் மலர்
ராமநாதபுரம்
- போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே 4 பேர் கைது.
- மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் 5 பேர் இலங்கை சென்றுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
இதனை கண்டித்து கடந்த மாதம் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருவோடு ஏந்தியும், கஞ்சி காய்ச்சியும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது ராமேசுவரம் வந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, போராட்டத் தில் ஈடுபட்ட மீனவர்களை நேரடியாக சந்தித்து பேசினார்.
மேலும் மத்திய, மாநில அரசுகளிடம் பேசி மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து சென்றார்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை மேலும் 11 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதிச்சீட்டு பெற்று 400 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலையில் அவர்கள் வடக்கு கடல் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டனர்.
இருந்தபோதிலும் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெர்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த பாம்பனை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 38), சவேரியார் அடிமை (35), முத்துகளஞ்சியம் (27), எபிரோன் (35), ரஞ்சித் (33), இன்னாசி (25), கிறிஸ்து (45), ஆர்னாட் ரிச்சே (36), ராமே சுவரத்தை சேர்ந்த பாலா (38), தங்கச்சிமடத்தை சேர்ந்த யோவான்ஸ் நானன் (36), அந்தோணி சிசோரியன் (43) ஆகிய 11 பேரையும் சிறைபிடித்தனர்.
மேலும் அந்த படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் பறிமுதல் செய்துகொண்ட இலங்கை கடற்படையினர், அவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 11 பேரிடம் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை மீன்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 11 பேரும் ஒரு விசைப்படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
பின்னர் ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என என இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்திக்கவும் இரு நாட்டு நல்லெண்ண அடிப்படையில் ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் 5 பேர் இலங்கை சென்றுள்ளனர்.
நேற்று யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து பேசிய நிலையில் இன்று மீண்டும் 11 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
- மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
- ஆறு பேர் கொண்ட குழு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ராமேசுவரம்:
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பாக் ஜலசந்தியில் மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் காரணமாக, அப்பகுதி இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதிலிருந்து ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை வைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கைது செய்து வந்த இலங்கை அரசு இதன் மூலம் தமிழக மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் பல அரசியல் வாதிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளனர். ஆனால் சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காமலே சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே ராமேசுவரம் மீனவர்கள் முயற்சியால் ராமேசுவரத்திலிருந்து விசைப்படகு தலைவர் ஜேசு ராஜா, சகாயம், ஆல்வின், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய் கிழமை) விமானம் மூலம் புறப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சென்றடைகின்றனர்.
ஏற்கனவே நாகப்பட்டினம் சேர்ந்த சுரேஷ் என்பவர் இலங்கையில் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு நாளை புதன்கிழமை அன்று வாவுலியாவில் உள்ள அருந்ததி தனியார் தங்கும் விடுதியில் இருநாட்டு மீனவர்களும் சந்தித்து காலை 10 மணி அளவில் சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகளை ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர்களையும் மற்றும் அதற்குரிய அதிகாரிகளையும் சந்தித்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்று விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.
- ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
- பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தின் தென்கோடியில் அமைந்து உள்ளது ராமேசுவரம். புனித நகரமான இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.
ரெயிலில் வருபவர்கள் ராமேசுவரம் செல்வதற்காக மண்டபத்தையும் ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.
1914-ல் அமைக்கப்பட்ட இந்த பாலம் சுமார் 2.3 கி.மீ. நீளம் உடையது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையுடையது. நிலப்பரப்பை ராமேசுவரம் தீவுடன் இணைக்கும் இந்த பாலத்தை கப்பல் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுவில் கத்திரி வடிவில் தூக்குகளும் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது அந்த தூக்கு திறந்து கொள்ளும். அதன் பிறகு மூடிக் கொள்ளும்.
இந்த பாலம் நூறு வயதை தாண்டி விட்டதால் இதன் அருகிலேயே கடந்த 2020-ம் ஆண்டில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பின் காரணமாக பழைய பாலத்தில் இருந்த 'ஷெர்ஜர்' தூக்கு பாலத்திலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது.
ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் கடல் மீது அமைந்துள்ள சாலை பாலம் வழியாகவே ராமேசுவரம் சென்று வருகிறார்கள்.
பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்ட தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும்.
இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.
அதன் பின்பு பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு ரெயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதமே திறப்பு விழாவை நடத்த ரெயில்வே நிர்வாகம் தயாரானது. ஆனால் பல்வேறு காரணங்களால் திறப்பு விழா நடத்துவது தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
இப்போது இந்த பாலத்தை பிரதமர் மோடி திறப்பது உறுதியாகி உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) திறப்பு விழா நடக்கிறது.
திறப்பு விழா ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா உள் ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ராமேசுவரம் வந்தனர். இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை பார்வையிட்டனர். பின்னர் பாம்பன் பாலத்தில் நின்று புதிய, பழைய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியதாவது:-
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் முதல் வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் திறப்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னரே ராமேசுவரம் ரெயில் நிலையப் பணிகள் முடிவடையும் என்றார்.
மீண்டும் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை மதுரையில் இருந்து சிறப்பு ரெயில் மூலமாக ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
திறப்பு விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் செய்யப்பட வேண்டிய விரிவான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே உள்ள கோவில் கட்டிட வளாகத்தில் மேடை அமைத்து பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த இடத்தில் மேடை அமைப்பது தொடர்பாகவும், பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் மண்டபம் பொதுப் பணித்துறை ஹெலிபேட் தளம், குந்துகால் பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷார் தலைமையிலான ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அவர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவுக்கான தேதி இன்னும் உறுதியாகவில்லை. ஏப்ரல் முதல் வாரத்தில் 5-ந்தேதி பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும் இலங்கை அதிபருடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின்போது அவர் பாம்பன் பாலத்தையும் திறந்து வைக்க வரலாம் என்று கருதப்பட்டது. ஆனால் வெளிநாட்டு பயணத்துடன் இந்த நிகழ்ச்சியையும் சேர்த்து நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பிரதமர் மோடி ராமேசுவரம் வருவதை உணர்வுப் பூர்வமாக கருதக் கூடியவர். காசியை போல் ராமேசுவரத்துக்கு செல்வதையும் புனித பயணமாக கருதுவார். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராமேசுவரம் வந்தபோது அங்குள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இரவு தங்கினார். அப்போது மெத்தையில் தூங்குவதை கூட தவிர்த்து தரையில் பாயில் படுத்து உறங்கினார். மறுநாள் ராமநாதசாமி கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினார்.
எனவே இந்த முறையும் ராமேசுவரம் வருகையை தனித்துவமாக இருப்பதையே விரும்புவார். எனவே அடுத்தமாதம் (ஏப்ரல்) 3-வது வாரத்தில் பால திறப்பு விழாவுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த மாத இறுதிக்குள் தேதி உறுதியாகி விடும் என்றார்கள்.
- புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
- பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய ரெயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. திறப்பு விழா தொடர்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று வந்தனர்.
இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்து காரில் வந்து பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி பாம்பன் புதிய ரெயில் பாலம் மற்றும் பழைய பாலத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே சென்று, புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் நிருபர்களிடம் கூறும்போது, "பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னர்தான் ராமேசுவரம் ரெயில் நிலைய பணிகள் முடிவடையும்" என்றார்.
- மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
- அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதியன்று விசைப்படகு ஒன்றில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
இந்த 14 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 14 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பு ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்தும் அதை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பறிமுதல் செய்த விசைப்படகை இலங்கை அரசுடைமை ஆக்கியும் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து 14 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ.2½ லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இலங்கை பணம் ரூ.2 லட்சம் என ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை இளையான்குடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- எச்.ராஜா இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் பரமக்குடிக்கு பாஜக நிர்வாகி நினைவஞ்சலிக்கு சென்ற எச்.ராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை இளையான்குடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, நாங்கள் என்ன பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தர்களா ? எதற்கு எங்களை தடுக்குறீர்கள் என்று எச்.ராஜா ஆவேசமாக கூறினார்.
இதைதொடர்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து எச்.ராஜாவை செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- வருகிற ஏப்ரல் 1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு.
- சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சி மடத்தை சேர்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான படகில் சென்றிருந்த சங்கர், அர்ஜூனன், முருகேசன் ஆகிய மூவரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
காங்கேசன்துறை முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் 3 மீனவர்களையும் ஒப்படைத்தனர். பின்பு அவர்களை ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மூன்று பேரையும், அவர்களின் விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக ராமேசுவரத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இந்த வேலை நிறுத்தத்தினால் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும்.
- பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும், தென்னகத்து காசி என்றழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் இந்த பூஜையில் அதிகளவில் பங்கேற்பார்கள்.
அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குழுவினர் இன்று காலை ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்க கோவிலுக்கு வந்தனர். இதில் ராஜ்தாஸ் (வயது 59) என்பவரும் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது.
இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த ராஜ்தாசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கேயே ஓரத்தில் படுக்க வைத்தனர். ஆனால் அங்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் அவரிடம் எந்த அசைவும் இல்லை.
இதுகுறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஊழியர்கள் ராஜ்தாசை கோவில் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ராஜ்தாஸ் இறந்து 20 நிமிடங்களுக்கு மேலாகி விட்டதாக தெரிவித்தனர். ராஜ்தாஸ் வரிசயைில் நின்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேசுவரம் கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலில் அதிகாலையில் நடந்த ஸ்படிக லிங்க பூஜையில் பக்தர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் என்பவர் திருச்செந்தூரில் வரிசையில் நின்றிருந்தபோது மூச்சுத்திணறி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த சங்கர், அர்ஜூனன், முருகேசன் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
- வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடல் எல்லையை யொட்டி மீனவர்கள் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர் மீனவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்த 14 மீனவர்களை சிறைபிடித்தனர்.
மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் நீதிமன்ற உத்தரவுபடி வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கைது செய்து வருகிறது. இதை கண்டித்து கடந்த வாரம் வேலைநிறுத்தம் மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் பாம்பன் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கைதான மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 3 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- உத்திரகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
- முன் விரோதத்தின் காரணமாக இக்கொலை நடந்து உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மகன் உத்திரகுமார் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்து உத்திரகுமார் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
உத்திரகுமார் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததோடு, வாரச்சந்தை, மீன் மார்க்கெட் போன்ற பொது ஏலங்களிலும் கலந்து கொண்டு ஏலம் எடுத்து வந்துள்ளார்.
இவர் மீது ரியல் எஸ்டேட் மோசடி வழக்குகள், கொலை வழக்கு, கொடுக்கல் வாங்கல் வழக்குகள், அடிதடி வழக்குகள், பொது ஏலத்தில் கலந்து கொண்டு தகராறு செய்த வழக்குகள் என பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பழனிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் உத்திரகுமார் சிறை சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு உத்திரகுமார் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் அவரை மறித்து வாளால் சரமாரியாக தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் வெட்டி விட்டு தப்பினர். இதில் உத்திரகுமார் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வாள் வெட்டில் அவரது தலை முற்றிலும் சிதைந்து காணப்பட்டது.
உத்திரகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து உடலைப் பார்த்து கதறி அழுதனர். கொலை குறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடரந்து உடலை மீட்ட போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரகுமாரின் அக்கா மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இதில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கிறதா? அல்லது ஏதேனும் முன் விரோதத்தின் காரணமாக இக்கொலை நடந்து உள்ளதா? அல்லது பழிக்கு பலியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
- உத்திரகுமார் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் உத்திரகுமார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.