என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கை கடற்படையால் 14 பேர் சிறைபிடிப்பு- பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
    X

    இலங்கை கடற்படையால் 14 பேர் சிறைபிடிப்பு- பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

    • தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
    • வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடல் எல்லையை யொட்டி மீனவர்கள் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர் மீனவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்த 14 மீனவர்களை சிறைபிடித்தனர்.

    மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் நீதிமன்ற உத்தரவுபடி வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அடுத்தடுத்து ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கைது செய்து வருகிறது. இதை கண்டித்து கடந்த வாரம் வேலைநிறுத்தம் மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் பாம்பன் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கைதான மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.

    மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 3 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×