என் மலர்
தமிழ்நாடு

கோபி செட்டிபாளையத்தில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக மாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்

- சாலை விரிவாக்கம் செய்வதற்காக கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.
- பணியாளர்கள் மூலம் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் சத்தி-ஈரோடு மெயின் ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர்கள்.
இதையடுத்து ரோடு விரிவாக்கம் பணி செய்வதற்காக அந்த மாரியம்மன் கோவிலை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பொது மக்களிடம் சமரசம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிலை, விநாயகர் சிலை மற்றும் உலோக சிலைகள் அகற்றப்பட்டது.
இந்த சாமி சிலைகள் கோபி அடுத்த பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறை பூட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதையடுத்து கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் மற்றும் சாமி சிலைகள் வைக்கப்பட்டு உள்ள பரியூர் ஆதி நாராயண பெருமாள் கோவில் என ஆகிய 2 கோவில்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இதையடுத்து அவர்கள் முன்னிலையில் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணியாளர்கள் மூலம் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து காலை கோவில் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.