search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    ஹிரோஷிமா - நாகசாகி வரிசையில் காசா.. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஜப்பான் அமைப்பு கூறும் காரணம்
    X

    ஹிரோஷிமா - நாகசாகி வரிசையில் 'காசா'.. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஜப்பான் அமைப்பு கூறும் காரணம்

    • இந்த இரண்டு அணுகுண்டுத் தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர்.
    • நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அமைப்பின் தலைவர் தோஷியுக்கி மிகாமிக்கி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

    இரண்டாம் உலகப் போர்

    இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் ஜப்பான் நடத்திய தாக்குதலில் 2,390 காப்பாற்றப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கொந்தளித்த அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டை வீசியது. இதில் 1,40,000 மக்கள் உயிரிழந்தனர்.

    இது நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகி நகரின் மீது இரண்டாவது அணு குண்டை அமெரிக்கா வீசியது. இந்த இரண்டு தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜப்பான் சரணடைந்ததும் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்திய மரபணு பாதிப்புகள் இன்றுவரை அந்நகரின் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    அமைதிக்கான நோபல்

    இந்த தாக்குதல்களின் உயிர்பிழைத்தவர்களின் சிலர் இணைந்து நிஹான் ஹிடான்கியோ என்ற அமைப்பை சுமார் 10 வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டில் உருவாக்குகின்றனர். உலகம் முழுவதிலும் அணுகுண்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் இந்த அமைப்பு இன்று வரை ஈடுபட்டு வருகிறது.

    அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களை உலகெங்கும் அனுப்பி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான சேதங்கள் மற்றும் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய கதைகளை இந்த அமைப்பு பகிர்ந்து கொள்கிறது. இந்த அமைப்புக்கு தற்போது 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    80 வருடங்கள் முன்

    நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அமைப்பின் தலைவர் தோஷியுக்கி மிகாமிக்கி [Toshiyuki Mimaki] அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் வைக்கும் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, பாலஸ்தீனத்தின் காசாவில் தற்போது உள்ள நிலை 80 வருடங்கள் முன்னாள் ஜப்பான் இருந்த நிலையை தனக்கு ஞாபகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்துக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் தோஷியுக்கியின் கருத்தை பலர் ஆமோதித்தனர். இந்த கருத்துக்கு இஸ்ரேலை ஊக்குவிக்கும் மேற்குலகம் செவி சாய்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

    காசா

    இஸ்ரேல் மீது கடந்த வருடம் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 2400 பேர் வரை உயிரிழந்தனர். இதனால் கொதித்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா உள்ளிட்ட நகரங்களின் கடந்த 1 வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.

    மனிதாபிமான உதவிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் உணவும் அத்தியாவசிய பொருட்களும், காயங்களை ஆற்றும் மருந்துகள் கிடைக்காமல் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது 80 வருடங்களுக்கு முன்னர் அணுகுண்டு தாக்குதலில் சிதைந்த ஹிரோஷிமா நாகசாகி நகர மக்கள் சந்தித்த பாதிப்புகளுக்குச் சற்றும் குறைந்தது கிடையாது என்பதே அமைதியை வலியுறுத்தும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அணுகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை தங்களின் பெருமையாகப் பறைசாற்றிக்கொள்ளும் அதிகார வர்க்கத்துக்கு இந்த குரல் ஒருபோதும் எட்டப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

    Next Story
    ×