search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    சுற்றுலா மற்றும் கல்விக்கான இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு
    X

    சுற்றுலா மற்றும் கல்விக்கான இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு

    • விசா கட்டண உயர்வு வருகிற அக்டோபர் 4-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • கட்டண உயர்வு இந்திய மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

    விசா கட்டணம் மாற்றங்கள் குறித்த சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.1540) உயர்த்தப்பட்டுள்ளது.

    மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் (ரூ.13 ஆயிரம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு வெளியே இருந்து மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டு களாகவும் (ரூ.50 ஆயிரம்), சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் (ரூ.12 ஆயிரம்) கட்டணம் உயரும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும், முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    பெரும்பாலான விசா வகைகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். இந்த விசா கட்டண உயர்வு வருகிற அக்டோபர் 4-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு கல்வி பயில இந்திய மாணவர்கள் அதிகளவில் விசாவுக்கு விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு இந்திய மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

    Next Story
    ×