என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![காதலி தந்தையை சுட்டவர், ஜாமீனில் வந்தார்... வந்ததும்?: வடக்கு கரோலினாவில் பயங்கரம் காதலி தந்தையை சுட்டவர், ஜாமீனில் வந்தார்... வந்ததும்?: வடக்கு கரோலினாவில் பயங்கரம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/29/1973923-usa-northcarolina-amberrose.webp)
காதலி தந்தையை சுட்டவர், ஜாமீனில் வந்தார்... வந்ததும்?: வடக்கு கரோலினாவில் பயங்கரம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆம்பர் ரோஸ், 7 வருடங்கள் மைக்கேல் ரிக்கருடன் நட்பில் இருந்தார்
- சிறைக்கு சென்ற ரிக்கர், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் லின்கன் கவுன்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் 63 வயதான லெசா ஆர்ம்ஸ்ட்ராங் ரோஸ் (Lesa Armstrong Rose), அவர் கணவர் டெட்டி (Teddy) மற்றும் அவர்களது மகள், ஆம்பர் ரோஸ் (Amber Rose).
ஆம்பர் ரோஸ், சுமார் 7 வருடங்கள் 36 வயதான மைக்கேல் ஸ்டீவன் ரிக்கர் (Michael Steven Ricker) எனும் ஆண் நண்பருடன் நட்பில் இருந்தார். பிறகு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
சில மாதங்களுக்கு முன் ரிக்கர், ஆம்பர் ரோஸை தாக்கியுள்ளார். இதனையறிந்த ரோஸின் தந்தை, ரிக்கரை அழைத்து விசாரித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இதையடுத்து ரிக்கர், டெட்டியை துப்பாக்கியால் சுட்டார். இதில் டெட்டி பலத்த காயமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ரிக்கர், காவல்துறையின் தேடலில் சிக்கினார். கைது செய்யப்பட்ட ரிக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து சில நாட்களில் ரோஸ் வீட்டிற்கு மீண்டும் ரிக்கர் வந்தார். அப்போது அங்கு ஆம்பர் இல்லை. ஆனால், ஆம்பர் ரோஸின் தாயார் லெஸா இருப்பதை கண்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை செய்தார். இதில் லெஸா உயிரிழந்தார்.
இச்சம்பவத்தையடுத்து காவல்துறையினரின் தீவிர தேடலில் மீண்டும் ரிக்கர் சிக்கினார்.
இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் நீதி அமைப்பில் உள்ள சுலபமான வழிகளில் ரிக்கர் போன்றவர் தப்பித்து வந்து மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவதை ஆம்பர் ரோஸ் விமர்சித்துள்ளார்.
அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
ரிக்கர் எங்கள் குடும்பத்தை தங்கள் குடும்பமாக நினைத்தான். நாங்களும் ரிக்கரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துத்தான் பழகி வந்தோம். உண்மையில் நான் நீதித்துறையின் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். ஜாமீனில் வந்தவனால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. தேவையற்ற விஷயங்களை குறித்து நீதித்துறை கவலைப்படுகிறது. சிறிதளவு போதை பொருள் வைத்திருப்பவர்கள் எளிதாக ஜாமீனில் வர முடிவதில்லை. ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன் வெளியே சுலபமாக வந்து மீண்டும் கொலை செய்கிறான்.
இவ்வாறு ரோஸ் தெரிவித்தார்.
ஆம்பர் ரோஸின் கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் பல பயனர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.