search icon
என் மலர்tooltip icon

    நைஜீரியா

    • கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
    • சனிக்கிழமை முதல் நேற்று வரை நடந்த இடைவிடாத துப்பாக்கி சண்டையில் பலர் உயிரிழப்பு.

    மத்திய நைஜீரியா நாட்டின் பிளாட்டு (Plateau) மாநிலத்தின் போக்கோஸ் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இந்த இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. நூற்றுக்கணகானவர்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர்.

    போக்கோஸ் பகுதியில் தொடங்கிய இந்த சண்டை பக்கத்து மாநிலமாக பார்கின்வாடி வரை பரவியது. இந்த மோதலில் முதலில் 16 பேர் மட்டுமே இறந்ததாக நேற்று முன்தினம் அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. ஆனால் சனிக்கிழமை முதல் நேற்று வரை நடந்த இடைவிடாத துப்பாக்கி சண்டையில் இதுவரை 113 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் காட்டு மிராண்டித்தனமானது. மிருகத்தனமானது. நியாயமற்றது என அம்மாநில கவர்னர் காலேப் முல்ட்வாஸ் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க அரசு நடவடிக்கை .எடுக்கும் என கவர்னரின் செய்தி தொடர்பாளர் கியாங் லரே தெரிவித்துள்ளார். 

    • ஆயுத கும்பலை குறிவைத்து ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
    • பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் கூடிய இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    நைஜீரிய நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஆயுத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கடுனா மாகாணம் டுடுன்பிரி கிராமத்தில் ராணுவ டிரோன் ஒன்று தாக்குதல் நடத்தியது.

    அந்த கிராமத்தில் பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் ஒரு இடத்தில் கூடி இருந்தனர். அப்போது ராணுவ டிரோன் தவறுதலாக கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

    இதில் ஏராளமானோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

    ஆனால் கிராம மக்கள் கூறும்போது, 30 பேர் பலியானதாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். மற்றொரு தகவலில் 85 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
    • கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

    அபுஜா:

    நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் பயங்கரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நட்த்தினர். துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் தப்பிச்சென்ற னர்.

    பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.

    இந்த தாக்குதலையடுத்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டியது. தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது.
    • துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதனையடுத்து துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.
    • கவர்னர் உபாசானி கூறும்போது, இந்த விபத்து இதயத்தை உடைக்கிறது.

    நைஜீரியாவின் கடுனா மாகாணம் ஜாரியா நகரில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதியில் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகள், தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மசூதி, 1830-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பழமையான மசூதி என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து கடுனா கவர்னர் உபாசானி கூறும்போது, இந்த விபத்து இதயத்தை உடைக்கிறது. இந்த பேரழிவு குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    • பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது
    • என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்

    நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது போர்னோ நகரம். பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது.

    ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நைஜீரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியில் கடந்த வாரம் பொது மக்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள கொண்டூகா பகுதியில் உள்ள கவூரி கிராமத்தில் போகா ஹராம் பயங்கரவாதிகள், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தாக்கி, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர்.

    "நேற்று காலை அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி மோட்டார் பைக்கில் வந்தார்கள். வயல் வேலையில் இருந்த விவசாயிகளின் பண்ணைகளை நாசம் செய்தார்கள். பிறகு அவர்களை கொன்றார்கள். கொடூரமாக கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்" என அவர்களிடம் இருந்து தப்பிய ஒரு விவசாயி அபுபக்கர் மஸ்தா கூறினார்.

    இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் போகோ ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் உள்ளது. நைஜீரியாவில் 2,000 ஆண்டிலிருந்தே செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பினால் அந்நாட்டில் பல ஆயிரக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை இயக்கம் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூன் பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது.

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவான மேற்கு ஆப்பிரிக்காவின் ஐ.எஸ். (Islamic State of West Africa) எனும் அமைப்பும் அந்நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    • டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் காயமின்றி தப்பினர்.
    • பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் நேற்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து ஒண்டோவில் உள்ள ஃபெடரல் சாலை பாதுகாப்புப் படையின் தலைவர் எசேக்கியேல் சோனால்லா கூறுகையில், "

    நேற்று முன்தினம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பெட்ரோல் டேங்கர் சாலையை விட்டு விலகி ஒன்டோவின் ஓடிக்போ மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது.

    இதைதொடர்ந்து, டேங்கரில் இருந்து எரிபொருளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடித்து சிதறியுள்ளது. நபர்களில் ஒருவர் செல்போன் வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்" என்றார்.

    இந்த விபத்தில், டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் காயமின்றி தப்பினர்.

    பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லாரியை முந்திச் செல்ல முற்பட்டபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.
    • வாகன ஓட்டிகள், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

    நைஜீரியாவில் கொடிய சாலை விபத்துகள் அடிக்கடி பதிவாகின்றன, பெரும்பாலும் அதிக சுமை, மோசமான சாலை நிலைமைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

    தென்மேற்கு நைஜீரியாவின் லாகோஸில் நேற்று முன்தினம் பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோவா நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிரக் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த சுமார் 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

    20 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து, லாகோஸ்-படக்ரி விரைவுச் சாலை வழியாக மோவோ நகருக்கு அருகே மணல் ஏற்றப்பட்ட டிரக் மீது மோதியதாக லாகோஸில் செய்தியாளர்களிடம் லாஸ்ட்மா செய்தித் தொடர்பாளர் தாவோபிக் அடேபாயோ தெரிவித்தார்.

    இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லாரியை முந்திச் செல்ல முற்பட்டபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

    வாகன ஓட்டிகள், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இதனால் தேவையில்லாத உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    • சமையலறையில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்த ஹில்டா பாசி தனது ஓய்வு இடைவேளைகளில் கூடுதல் நிமிடங்களை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • சமையல் நேரத்தில் 7 மணி நேரம் கழிக்கப்பட்டு 93 மணி நேரம் 11 நிமிடங்கள் இடைவிடாமல் சமைத்ததாக அறிவிக்கப்பட்டது.

    நீண்ட நேரம் சமையல் செய்து உலக சாதனை படைத்து அசத்தி உள்ளார் நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண். அவரது பெயர் ஹில்டா பாசி. 26 வயதான இவர் சுமார் 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைக்க முயன்றுள்ளார்.

    மே 11-ந்தேதி தொடங்கிய இவரது சமையல் பயணம் மே 15-ந்தேதி வரை தொடர்ந்துள்ளது. சமையலறையில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்த இவர் தனது ஓய்வு இடைவேளைகளில் கூடுதல் நிமிடங்களை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சமையல் நேரத்தில் 7 மணி நேரம் கழிக்கப்பட்டு 93 மணி நேரம் 11 நிமிடங்கள் இடைவிடாமல் சமைத்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்திய சமையல் கலைஞரான லதா டோண்டன் என்பவர் 87 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த சாதனை படைத்திருந்தார். அதனை ஹில்டா பாசி தற்போது முறியடித்துள்ளார். இதுகுறித்து ஹில்டா பாசி கூறுகையில், நைஜீரிய உணவு வகைகளை பிரபலபடுத்தும் வகையில் இந்த சாதனையை முயற்சி செய்ததாக அவர் கூறினார்.

    • நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இதில் 103 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அபுஜா:

    நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் இதில் பங்கேற்றனர்.

    திருமணம் முடிந்து 300க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். மேலும் பலர் படகில் தங்களது பைக்குகளை எடுத்து வந்திருந்தனர். அப்போது அதிக பளு காரணமாக படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 103 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

    தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 100க்கு மேற்பட்டோரை மீட்டுள்ளனர். மேலும், மாயமான பலரை தேடி வருகின்றனர்.

    திருமணத்துக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய மக்கள் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் 3 நாள் சுற்றப்பயணத்தின் ஒரு பகுதியாக நைஜீரியாவுக்கு சென்று உள்ளார்.
    • இந்நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் ககாமே, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா போன்றோரும் கலந்து கொண்டனர்.

    நைஜீரியா நாட்டில் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போலா தினுபு இன்று பதவியேற்றுக் கொண்டார். இதனால், தினுபு நைஜீரியாவின் 16-வது அதிபராகியுள்ளார்.

    இதற்காக தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் 5 ஆயிரம் பேர் அமர கூடிய இடத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.

    பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் ககாமே, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா போன்றோரும் கலந்து கொண்டனர்.

    அழைப்பிதழ்கள் இல்லாத நாட்டு மக்கள் நிகழ்ச்சியை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் 3 நாள் சுற்றப்பயணத்தின் ஒரு பகுதியாக நைஜீரியாவுக்கு சென்று உள்ளார். 

    • இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
    • போலீசார் அங்கு விரைந்து வந்து வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பிளேட்டு:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும்,அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது.

    அங்குள்ள ஒரு நிலத்தில் கால் நடைகள் மேய்ந்தது. இதனை தட்டிக்கேட்ட உரிமையாளருக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர். சிலர் துப்பாக்கியை எடுத்து சுடவும் ஆரம்பித்தனர். இந்த மோதலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும், தாக்கப்பட்டதிலும் அடுத்தடுத்து பலர் இறந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதில் பலர் இறந்தனர்.இதனால் கடந்த 3 நாட்களில் இந்த மோதலுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 85- ஆக உயர்ந்து உள்ளது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    வன்முறை மேலும் பரவாமல் தடுக்க அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போலீசாரை பார்த்ததும் வன்முறை கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    ×