search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா.. அடுத்தது என்ன? - அவரது மகன் சொல்லும் தகவல்
    X

    இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா.. அடுத்தது என்ன? - அவரது மகன் சொல்லும் தகவல்

    • ஷேக் ஹசீனா, லண்டன் செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
    • குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் தனது பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

    வங்காள தேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியதை அடுத்து நேற்று அதன் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதனைத்தொடர்ந்து தனது சகோதரி ஷேக் ரெகானாவுடன் சேர்ந்து ராணுவ விமானம் மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

    ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்காளதேச ராணுவம் ஆட்சியை கையில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் வங்காளதேச தேசிய கட்சி செயலாளர் மிர்சா பக்ருல் இஸ்லாம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நாட்டின் சட்டம்-ஒழுங்குக்கான பொறுப்பை ராணுவம் ஏற்கும் என தெரிவித்தார்.

    இந்தசூழலில் ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் அங்கு தனது மகளை சந்தித்த பின் ஷேக் ஹசீனா, லண்டன் செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில் பிரதமர் பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, அரசியலுக்கு இனி மீண்டும் திரும்பமாட்டார் என அவரது மகன் சஜீப் வாசேத் ஜாய் கூறியுள்ளார்.

    இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'வங்காள தேசத்தில் போராட்டம் வெடித்ததால் 4-ம் தேதியில் இருந்தே பதவி விலகுவது குறித்து ஷேக் ஹசீனா பரிசீலித்து வந்தார். இருப்பினும் நாட்டை விட்டு வெளியேற அவர் தயக்கம் காட்டினார். குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் தனது பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

    ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது வங்காளதேசம் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஒரு ஏழை நாடாக இருந்தது. ஆனால் தற்போது ஆசியாவில் எழுச்சி பெறும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்காக கடினமாக உழைத்த தனக்கு எதிராக ஒரு சிறு குழுவினர் எழுந்ததால் அவர் ஏமாற்றத்தில் உள்ளார். இனிமேல் அவர் அரசியலுக்கு திரும்பமாட்டார்" என்று ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் கூறினார்.

    Next Story
    ×