search icon
என் மலர்tooltip icon

    மேற்கிந்தியத் தீவு

    • இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.
    • மேலும், இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. அட்டவணை தயாரித்துள்ளது என்றார் வாகன்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐ.சி.சி. அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், மைக்கேல் வாகனின் கருத்து குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:

    மைக்கேல் வாகன் எனக்கு மிகவும் அன்பான நண்பர். இரவு 8 மணிக்கு இந்திய கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் ஐ.சி.சி எப்படி இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகளை வெல்ல உதவுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

    ஒளிபரப்பு கிரிக்கெட் போட்டிகளை எப்படி வெல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இன்னும் நடுவில் விளையாடி வெற்றிபெற வேண்டும்.

    இரண்டாவதாக, அவர்கள் எல்லா இடங்களிலும் சுற்றிச் சென்று வெற்றி பெற்றபோது கயானாவை ஏன் வெற்றிக்கான இடமாக நினைக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.

    உலக கிரிக்கெட்டில் இந்தியா அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது.

    ஒரு நிறுவனத்தின் 80 சதவீத பங்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்குச் சொந்தமானதாக இருந்தால் அவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்ப்பார்கள் என தெரிவித்தார்.

    • இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
    • 2 அணிகளும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாடினால் மட்டும் தான் ஆட்டத்தின் முடிவு தெரியவரும்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன.

    லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எட்டின.

    அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் இன்று இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்தியா எந்த ஐ.சி.சி. கோப்பையும் வென்றதில்லை என்பதால் இந்த இறுதிப்போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதே போல் முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றுமா என்று ஆவலும் அதிகரித்துள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி கிடைக்கும்.

    ஆனால், போட்டி நடைபெறும் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை இன்று மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் நாளை ரிசர்வ் நாளில் போட்டி விட்ட இடத்தில இருந்து மீண்டும் துவங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ரிசர்வ் நாளிலும் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் உலகக்கோப்பை 2 அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

    2 அணிகளும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாடினால் மட்டும் தான் ஆட்டத்தின் முடிவு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணிக்கு சுழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.
    • இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது என்றார் அக்தர்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் கயானாவில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

    இந்தியர்களால் சுழலை சமாளிக்க முடியும். ரோகித் சர்மா இங்கிலாந்தின் அதில் ரஷீத்தை சமாளித்தார்.

    ஆனால் இங்கிலாந்து அணியினருக்கு எப்படி சுழலை எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.

    இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது.

    அங்கே இங்கிலாந்து முதலில் பேட் செய்து 150 ரன்கள் எடுத்து இந்தியாவை அழுத்தத்தில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 2-வது பேட்டிங் செய்வதாக அடம் பிடித்தனர்.

    மறுபுறம் இந்தியா வெற்றிக்கு தகுதியானவர்கள். இந்த தொடரை அவர்கள் வெல்ல வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

    கடந்த ஆண்டு வென்றிருக்க வேண்டிய உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் நானும் மனமடைந்தேன். ஏனெனில் அவர்கள் வெல்வதற்கு தகுதியானவர்கள்.

    தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தி கோப்பையை வெல்லவேண்டும் என ரோகித் சர்மா சொல்லி வருகிறார். அதை வெல்வதற்கு அவர் தகுதியானவர்.

    இந்நேரம் அவர் 2 உலகக் கோப்பையை கையில் வைத்திருக்க வேண்டும். இம்முறை அவர்கள் கோப்பையை விடக்கூடாது.

    மிகவும் பெரிய வீரராகவும், சுயநலமற்ற கேப்டனாக தன்னுடைய அணிக்காக விளையாடும் அவர் தனது கேரியரை உச்சமாக முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.
    • இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், கிரேடு கிரிக்கெட்டர் போட்காஸ்டில் பங்கேற்ற தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்திய அணியின் குல்தீப் யாதவ் பந்துவீச்சுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அப்போது, கடந்த மாதம் தான் வெளியிட்ட பதிவை நினைவுபடுத்தினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி அமர்வுகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் எனக்கு பந்து வீசமாட்டார்.

    2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் குல்தீப் பந்துவீசாமல் இருப்பது சுழற்பந்து வீச்சாளரின் கவனமான முடிவு.

    டெல்லி அணியுடனான பயிற்சி வலைகளில் குல்தீப்பை எதிர்கொள்ள ஆர்வமாக இருந்தேன்.

    உலகக் கோப்பைக்கான எனது சொந்தத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
    • இவருக்கு முன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அவரது தலைமையில் இந்திய அணி எட்டியுள்ள 3-வது இறுதிப்போட்டி ஆகும்.

    கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்தியா தகுதிபெற்றது. உள்ளூரில் களமிறங்கிய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

    இதேபோல், கடந்த 2021-23-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.

    இந்நிலையில், ரோகித் சர்மா ஐசிசி நடத்தும் ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2வது கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

    இவருக்கு முன்னதாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் டாஸ் போடப்பட்டதும் இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    இதையடுத்து, இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி இன்றும் 9 ரன்களில் வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவற்றில் 2 போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலிக்கு இந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமையவில்லை.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியது.
    • மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி களமிறங்குகிறது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
    • தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், கயானாவில் இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் சந்திக்க உள்ளன.

    ஆனால் கயானாவில் மழை பெய்து வருவதால் மைதானத்தைச் சுற்றி ஈரப்பதம் காணப்படுகிறது. இதையடுத்து, டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
    • மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என்றார் ரோகித் சர்மா.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

    இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்திய கேப்டன்

    ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்நிலையில், மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என ரோகித் சர்மா கூறினார். இதுதொடர்பாக ரோகித் சர்மா பேசியதாவது :

    மழையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது.

    ஒருவேளை இப்போட்டி தாமதமாக முடிந்தால் நாங்கள் செல்ல வேண்டிய தனி விமானத்தை தவற விடுவோம் என்பதே எனது ஒரே கவலையாகும்.

    ஆனாலும் எங்களை அடுத்த போட்டி மைதானத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டியது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் மற்றும் ஐசிசியின் பொறுப்பு.

    தற்போதைக்கு இப்போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவை பெறுவதில் கவனம் செலுத்துகிறோம்.

    கயானாவில் விளையாடுகிறோம் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்ததை நான் சாதகமாக நினைக்கவில்லை.

    இதுபோன்ற வெவ்வேறு மைதானங்களில் நிறைய வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்கிலாந்து வீரர்களும் இங்கே விளையாடி இருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன். எனவே இது சாதகம் கிடையாது.

    வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதிபெற்றது.
    • முதல் அரையிறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடந்திருக்க வேண்டும் என மைக்கேல் வாகன் குற்றம்சாட்டினார்.

    டிரினிடாட்:

    டிரினிடாட் நகரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

    மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்நிலையில், இந்த போட்டி டிரினிடாடில் நடந்திருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    ஆப்கானிஸ்தான்-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட அரையிறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடந்திருக்க வேண்டும். இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி டிரினிடாட் நகரில் நடந்திருக்க வேண்டும்.

    இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐசிசி அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.

    திங்கட்கிழமை இரவு செயின் வின்சென்டில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுகிறது. அதன்பின் அரையிறுதியில் விளையாட செவ்வாய்க்கிழமை டிரினிடாட் செல்ல 4 மணி நேரம் விமானம் தாமதமானது. இதனால் அவர்களுக்கு பயிற்சி செய்யவும், புதிய மைதானத்தில் பழகவோ நேரம் இல்லை என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

    அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா விளையாடினால் அதை பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்பதால், கயானாவில் 2வது அரையிறுதி நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
    • இன்று இரவு நடக்கும் 2-வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இன்று இரவு கயானாவில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    கயானா மைதானத்தில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்ய 88 சதவீதம் வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 2-வது அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைபட்டு ரத்தானால் புள்ளிப்பட்டியலில் (சூப்பர் 8 சுற்று) முதலாவதாக இருக்கும் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்

    இந்தப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது.

    மேலும், மழையால் பாதிக்கப்பட்டால் கூடுதலாக 250 நிமிடம் (4 மணி நேரம், 10 நிமிடம்) தரப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் இரு அணிகளும் தலா 10 ஓவர் விளையாடி இருந்தால் போட்டி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் 29-ம் தேதி பார்படாசில் நடைபெற உள்ளது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

    இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு கிறிஸ் கபானி மற்றும் ராட் டக்கர் ஆகியோர் அம்பயர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் கயானா மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றியுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் இந்திய அணி சிறந்து விளங்குகிறது.

    இதேபோல், இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 2 வெற்றியுடன் 5 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    கடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும்.

    அதே வேளையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    நாளை காலை 6 மணிக்கு டிரினிடாட்டில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

    டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் 29-ம் தேதி பார்படாசில் நடைபெற உள்ளது.

    ×