search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengaluru Court"

    • ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டனர்.
    • சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி இப்போது கர்நாடக மாநில சட்டத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று மரணம் அடைந்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு அவரது நகை மற்றும் சொத்துக்களுக்கான வழக்கு சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்த போது அவரது போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்திய போது ஏராளமான பொருட்களை கைப்பற்றியதோடு வங்கிகளில் உள்ள பணம் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.

    அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட 6 டிரங்பெட்டி நகைகள், 1562 ஏக்கர் நிலம், பல கோடி ரூபாய் வங்கிப் பணம் ஆகியவை கர்நாடக கோர்ட்டு கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே இறந்து போனார். இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு தண்டனை உறுதியானதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு ஜெயிலில் தண்டனை அனுபவித்து விடுதலையானார்கள்.

    இந்த நிலையில் கோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள நகை மற்றும் சொத்துக்களை ஏலம் விட சொல்லி பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் வழக்கு போட்டார்.

    இதையடுத்து வழக்கறிஞர் கிரண்ஜவாரி என்பவரை கோர்ட்டு நியமித்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.

    மேலும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கவும் ஏலம் விட்டு வழக்குக்காக கர்நாடக அரசு செலவிட்ட ரூ.5 கோடியை தமிழக அரசு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.


    இதையறிந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டனர். அதில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் நாங்கள் தான். எனவே நகை உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இந்த நிலையில் தான் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி இப்போது கர்நாடக மாநில சட்டத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் இன்னும் மதிப்பு குறையாமல் அப்படியே இருக்கும் நகைகள், சொத்து, பணம் ஆகியவற்றை உடனடியாக ஏலம் விட வேண்டும். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஏராளமான பணம் கிடைக்கும் அதன் மூலம் ஏழைகளின் நல்வாழ்விற்கு செலவிட முடியும்.

    இந்த வழக்கில் தீபா, தீபக்குக்கு எந்த ரோலும் கிடையாது. அவர்களின் மனு தள்ளுபடியாகி விட்டது. இதை ஐகோர்ட்டில் விளக்கிடும் வகையில் அதற்கு ஏதுவான மனுவை கிரண்ஜவாரி தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    • ஜாமின் மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது.
    • மாதத்தின் ஒவ்வொரு 2-வது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.

    பெங்களூரு:

    எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ.வின் மூத்த மகன் சூரஜ் ரேவண்ணா (வயது 37). டாக்டரான இவர் தற்போது எம்.எல்.சி.யாக உள்ளார். இந்த நிலையில் சூரஜ் ரேவண்ணா, தனது கட்சி தொண்டர் உள்பட 2 பேரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகார்களின்பேரில் ஒலேநரசிப்புரா போலீசார் கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி சூரஜ் ரேவண்ணாவை கைது செய்தனர்.

    இந்த வழக்குகள் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் சூரஜ் ரேவண்ணாவை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில், சூரஜ் ரேவண்ணா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன் மீதான முதல் பாலியல் வழக்கில் ஜாமின் கேட்டு பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் சூரஜ் ரேவண்ணா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சூரஜ் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு கோர்ட்டு தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது ஜாமின் பெற்று வெளியே வந்த பிறகு புகார் அளித்த நபரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்ட கூடாது. மாதத்தின் ஒவ்வொரு 2-வது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.

    அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஆஜராகி இருக்க வேண்டும். மேலும் ரூ.2 லட்சத்திற்கு டெபாசிட் தொகையை உத்தரவாதமாக செலுத்துவது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. முதல் வழக்கில் ஜாமின் கிடைத்தாலும் சூரஜ் ரேவண்ணா 2-வது பாலியல் வழக்கில் கைதாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    ×