search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gomati Amman"

    • ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.

    ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.

    சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயண சுவாமி, கோமதி அம்மன் முதலிய சன்னதிகளை உள்ளடக்கிய கோவில் வெளிப்பிரகாரத்தை 108 முறை சுற்றுவதே ஆடிச்சுற்று ஆகும்.

    சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு கொடி ஏறிய பின் ஆடிச்சுற்று எனும் பெயரில் பக்தர்கள் கோவிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையுடன் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள்.

    ஆடிச்சுற்று சுற்றுவதால் ஒரு காலில் நின்று தபசு காட்சியருளும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அம்பாளும் இப்படி தனது கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் அகற்றுகிறாள்.

    பக்தர்கள் தங்களின் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து, கோமதி அம்மனை வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள். மாணவ-மாணவிகள், வாலிபர்கள், கன்னிப்பெண்கள், வயதான ஆண்-பெண் என அனைத்து வயதினரும் ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள்.

    மாணவ-மாணவிகள் நன்கு படிக்க வேண்டும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும், எதிர்காலத்தில் மருத்துவர், என்ஜினீயர், கலெக்டர், போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள்.

    கன்னிப்பெண்கள் தனக்கு நல்ல கணவர் அமைய வேண்டும், நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், குழந்தை பேறு வேண்டும் என பல வேண்டுதல்களை மனதில் வைத்து ஆடிச்சுற்று செல்கின்றனர். இதேபோல் வாலிபர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வேண்டி ஆடிச்சுற்று செல்கின்றனர்.

    நடுத்தர வயது ஆண் மற்றும் பெண்கள் தங்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தங்களது குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். வயதானவர்கள் நோய்நொடியால் அவதிப்படாமல் வாழ வேண்டும் என வேண்டி செல்கிறார்கள்.

    இப்படியாக அனைத்து வயதினருமே தங்களுக்கு தகுந்தா ற்போல் கோமதி அம்மனை மனதில் நினைத்தப்படி ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதன் மூலம் கோமதி அம்மன் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டமே சாட்சி.

    தொடக்க காலத்தில் ஆடிச்சுற்று செல்பவர்களின் எண்ணிக்கை 100 முதல் 200 வரையே இருக்கும். ஆனால் இன்றோ பல்லாயிரக் கணக்கானோர் ஆடிச்சுற்று செல்கிறார்கள்.

    ஆடிச்சுற்று ஒரே நாளில் முடித்து விட முடியாது என்பதால் பல பக்தர்கள் சங்கரன் கோவிலில் பல நாட்கள் தங்கி ஆடிச்சுற்று செல்கிறார்கள். ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடந்த பிறகே பக்தர்கள் ஆடிச்சுற்று செல்ல தொடங்குவார்கள்.

    ஆடித்தபசு திருவிழாவிற்குள் ஆடிச்சுற்று முடித்துவிட வேண்டும். இதனால் கொடியேற்றப்பட்ட நாளில் இருந்தே பக்தர்கள் ஆடிச்சுற்று நடக்க தொடங்குவர். இதனால் கொடியேற்றபட்டதில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    வெளி பிரகாரத்தில் பக்தர்கள் ஆடிச்சுற்று சென்றபடியே இருப்பார்கள். விடுமுறை நாட்களில் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்படுவர். ஆடிச்சுற்று செல்லும் பக்தர்களின் நியாயமான அனைத்து வேண்டுதல்களையும் கோமதி அம்மன் நிறைவேற்றுவதாக ஐதீகம்.

    • கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.
    • ஆடித் தபசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள்.

    ஒருமுறை 'சிவன் பெரியவரா?... விஷ்ணு பெரியவரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும்' என்று எண்ணினாள் அம்பிகை.

    தனது எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி, 'சுவாமி... சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லாமல் பொருந்தி இருக்கும் திருக்காட்சியைக் காட்டியருள வேண்டும்' என வேண்டினாள். உடனே சிவபெருமான், 'தேவி உனது எண்ணம் நிறைவேறும்.

    பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகில் உள்ள புன்னை வனத்தலத்துக்கு (சங்கரன்கோவில்) சென்று தவமியற்று. அங்கு நீ விரும்பியபடியே, யாம் சங்கர நாராயணராக காட்சி கொடுப்போம். மகாசக்தியான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்' என்றார்.

    அதன்படியே பூலோகத்தில் உள்ள புன்னை வனத்தலத்தை அடைந்தாள் அம்பிகை. அங்கே, முனிவர்கள் - புன்னை மரங்களாகி நிழல்தர, அந்த நிழலில் பெரும் தவத்தை மேற்கொண்டாள் அம்பிகை.

    தேவ மாதர்கள் பசுக் கூட்டமாக தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். அதனால் மகிழ்ந்த அம்பிகை, அந்த பசுக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்த, 'ஆவுடையாள்' எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு). மேலும், 'கோ'(பசு)க்களின் பெயரை இணைத்து 'கோமதி' எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். அம்பிகையின் தவத்தால் அங்கே ஆவினங்களும் பெருமை பெற்றன.

    எந்த திருக்காட்சியைக் காண அங்கே அன்னை தவம் செய்தாலோ, அந்த காட்சியைக் காணும் பாக்கியத்தை இரு பாம்புகளுக்கும் அளித்து அருள் புரிந்தாள் அம்பிகை. சங்கன், பதுமன் என்று இரு சர்ப்பங்கள், சங்கன் - சிவபக்தன். பதுமன் - விஷ்ணு பக்தன். இவர்களுக்கிடையே பெரும் போட்டி.

    'சிவன் தான் பெரியவர்' என்று சங்கன் சொல்ல, 'இல்லை, விஷ்ணுவே பெரியவர்' என்று பதுமன் கூற, இருவருக்கும் இடையே சண்டை மூண்டது.

    இருவரும் முனிவர்கள் பலரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தேடினார்கள். அப்போது குருபகவான், 'அறியாமை கடலில் மூழ்கிக் கிடக்கும் உங்களுக்கு, ஞான விளக்கம் கிடைக்க வேண்டுமெனில், நீங்கள் புன்னை வனம் செல்லுங்கள். அங்கு உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும்' என்றார்.

    அதன்படி இருவரும் அருள் செழிக்கும் புன்னை வனம் வந்து தவமியற்றினர். அவர்களின் தவம் சங்கரரையும் நாராயணரையும் மகிழச் செய்தது. வீண்வாதம் செய்யும் அவர்களுக்காக மட்டுமல்லாமல், உலகிலுள்ள மற்றவர்களுக்கும் உண்மையை உணர்த்த, பாதித்திருமேனி சங்கரர், பாதி திருமேனி நாராயணராக கோலம் கொண்டு சங்கரநாராயணராகத் திருக்காட்சி கொடுத்தனர்.

    அம்பிகைக்கு இறைவன் சங்கரநாராயணராக காட்சி தந்த வைபவமே இங்கே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழாவில் உத்திராட நட்சத்திரத்தன்று, ஆடித் தபசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள்.

    அன்று மாலை ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறும். ஆடித்தபசு திருவிழாவில் கலந்து கொண்டு தரிசித்தால் கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும், வாழ்வில் தடைகள்யாவும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன.
    • அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார்.

    நினைப்பவர்களுக்கும், தன்னைத் தேடி வருபவர்களுக்கும் அருள் மாரி பொழியும் அம்பிகை, 'கோமதி அம்மன்' என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள சங்கரன்கோவில் திருத்தலத்தில் 1944-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது.

    ஆடி மாதம், ஆடித் தபசு திருவிழாவுக்கு உலகில் உள்ள மொத்த பேரும் திரண்டு வந்தது போல, சங்கரன்கோவில் முழுக்க மக்கள் வெள்ளம். இரவு நேரம். தெற்கு ரத வீதியில் இருக்கும் தபசு மண்டபத்தில், பல்லக்கில் எழுந்தருளியிருந்தாள் உற்சவ மூர்த்தியான அம்பிகை. திருக்கல்யாண அலங்காரத்தில் இருந்ததால், அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன.

    அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார். சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள அரியூரை சேர்ந்த கணக்குப் பிள்ளை ஒருவர், பட்டரைப் போல வேடம் அணிந்து பல்லக்கை நெருங்கினார். அவர் அந்த கிராமத்து முக்கியஸ்தர். கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். மனோவசியம் உள்பட பல வித்தைகள் கற்றவர். அவரைப் பார்த்த எவருக்குமே சந்தேகம் ஏற்படவில்லை. 'யாரோ, பூஜை செய்யும் பட்டர்' என்று நினைத்தனர்.

    பல்லக்கை நெருங்கிய அவர், அதில் ஏறி அம்மனின் காதுகளை அலங்கரிக்கும் வைரத் தோடுகளை கழற்றிக் கொண்டு, கும்பலோடு கும்பலாக கலந்து மறைந்தார். (அந்த தோடுகளின் அன்றைய மதிப்பு பதினாறாயிரம் ரூபாய்.) அப்போது அசதியுடன் பல்லக்கில் சாய்ந்திருந்த குப்புசாமி பட்டரை, சுமார் எட்டு வயது சிறுமி ஒருத்தியின் மென்மையான கரங்கள் உலுக்கி எழுப்பின. அரக்கப் பரக்க கண் விழித்து எழுந்த குப்புசாமி பட்டரின் எதிரில் ஒளி மயமாக அந்த குழந்தை நின்று கொண்டிருந்தாள்.

    'என்ன? ஏது?' என்று கேட்பதற்கு முன், அவளாகவே பரபரப்புடன், 'மாமா... மாமா... எனது தோடுகளை ஒருவன் திருடிக் கொண்டு போகிறான். வா, வந்து அவனைப் பிடி' என்று அவரின் கைகளைப் பிடித்து இழுத்தாள். 'ஏதோ நடந்திருக்கிறது' என்பதை சட்டென்று உணர்ந்த குப்புசாமி பட்டர், மந்திரத்தில் கட்டுண்டவர் போல சிறுமியை பின்தொடர்ந்தார்.

    சற்றுத்தூரம் சென்றதும், திருடனை சுட்டி காட்டிய சிறுமி, 'அதோ போகிறானே... அவன்தான் எனது தோடுகளை திருடியவன்' என்றாள். கட்டுமஸ்தான உடம்போடு ஒருவர் போய்க் கொண்டிருந்தார். ஒல்லியான உடல்வாகு கொண்ட பட்டருக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ தெரியவில்லை. விறுவிறுவென்று போய், அந்த நபரின் மூடிய கையை பற்றி இழுத்துக் கடித்தார்.

    அந்தநபர், திமிறினாரே தவிர, எதிர்த்து தாக்காமல், பிரமை பிடித்தவர் போல் அப்படியே நின்றார். அவர் கையை பிரித்து பார்த்தால், அம்மனின் ஆபரணம் ஜொலித்தது. 'திருடன் திருடன்' என்று கத்தியபடி சிறுமியை பார்த்தார் குப்புசாமி பட்டர். அவள் மாயமாக மறைந்து விட்டிருந்தாள்!

    அதற்குள் அங்கிருந்த மக்கள் அந்தத் திருடனைப் பிடித்து அடிக்கத் தொடங்கினர். திருவிழாக்கும்பல். கேட்கவா வேண்டும்? ஆளாளுக்கு அடித்தார்கள். ஆனால், அந்த நபரோ, 'அடியுங்கள்... நன்றாக அடியுங்கள். அப்போதுதான் நான் செய்த பாவம் தீரும்' என்று சொன்னாரே தவிர கலங்கவில்லை. அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதிகாச, புராண காலத்தில் மட்டுமின்றி எப்போதும் தெய்வம் தனது திருவிளையாடலை நிறுத்தியதில்லை. அடியாருக்கு அருள்புரிவதன் மூலம் அது எப்போதும் தன்னை வெளிப்படுத்தவே செய்கிறது. அனுபவத்தால் இதை உணர்ந்தவர்கள், அடுத்தவர்களுக்கு சொல்கிறார்கள். அனுபவம் பெற துடிப்பவர்கள் அதை நம்புகிறார்கள். தெய்வத்தின் அருளை தாங்களும் அனுபவிக்கிறார்கள்.

    ×