search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamalkasan"

    • கமல்ஹாசன் சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் கால் பதித்து வருகிறார்.
    • கமல்ஹாசன் தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் கால் பதித்து வருகிறார்.

    தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக இருப்போம் என்று தேர்தல் களத்தில் பேசி வந்த கமல்ஹாசன் தற்போது தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு இடம் கிடைக்காத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி கமல்ஹாசன் விரைவில் மேல்சபை எம்.பி.யாக டெல்லி செல்ல உள்ளார்.

    தனித்து போட்டியிடுவது என்கிற முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கும் கமல்ஹாசன் இனி வரும் காலங்களிலும் தி.மு.க. கூட்டணியிலேயே இணைந்து செயல்பட திட்ட மிட்டுள்ளார்.

    டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களையும் தி.மு.க. கூட்டணியில் இருந்தே எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வேலைகளை அந்த கட்சியின் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருவதால் தி.மு.க. கூட்டணியில் கணிசமான இடங்களை பெற்று போட்டியிடுவது என மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்திருக்கிறது.

    மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தங்களுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க இடங்களை கேட்டு பெற்று அதில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார்.

    சினிமா படப்பிடிப்புகளில் தற்போது பங்கேற்று வரும் கமல்ஹாசன் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னை வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

    இதன்படி டிசம்பர் மாதத்திற்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அவர் விரிவான ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அதே போன்று2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பிடத்தக்க இடங்களை தி.மு.க. கூட்டணியில் கேட்டு பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் கணக்காக உள்ளது.

    இதன் மூலம் நிச்சயம் சட்ட மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி காலடி எடுத்து வைக்கும் என்று அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ×