search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northeast Monsson"

    • திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

    இந்நிலையில், சென்னையில் கனமழை பெய்து வருவதாலும், பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ரெயில் நிலையம் இடையே தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சென்னை- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி ரெயில்,

    சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயில்

    சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ்

    சென்னையில் இருந்து மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க. திட்டங்களை முழுமையாக தொடர்ந்து செயல்படுத்தவில்லை.
    • இதனால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் தத்தளித்தன.

    சென்னை:

    அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

    இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தாலும், தாழ்வான இடங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே உணவு வழங்க இயலும்.

    எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வயிறார உண்பதற்கு வசதியாக, எங்களது ஆட்சிக் காலங்களில் மேற்கொண்டது போல், அம்மா உணவகங்களில் 3 நேரமும் தரமான உணவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினின் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இன்னும் உணவு வழங்கப்படவில்லை என்று அங்குள்ள மக்கள் கூறுவதை ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. எனவே, உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்க வலியுறுத்துகிறேன்.

    ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக 5 ஆண்டுகளும், உள்ளாட்சித் துறை மற்றும் துணை முதலமைச்சராக 5 ஆண்டுகளும் இருந்தபோது ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.

    மாறாக, எனது தலைமையிலான ஆட்சியில் 2020-ம் ஆண்டில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்ற பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருந்த இடங்கள் பெருமளவு குறைக்கப்பட்டது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி, பொதுப்பணி மற்றும் அறநிலையத் துறைகளுக்குச் சொந்தமான குளம், குட்டைகள் தூர் வாரப்பட்டன. சென்னையில் உள்ள 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    விடியா தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் இப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பிறகு ஓராண்டு தாமதத்திற்குப் பிறகே இந்தப் பராமரிப்புப் பணிகள் துவக்கப்பட்டன. இதனால்தான், கடந்த ஆண்டுகூட பருவமழையின்போது சென்னை வெள்ளத்தில் மிதந்தது.

    இதேபோன்று, கூவம் மற்றும் அடையாற்றில் வெள்ள நீர் எளிதாக செல்வதற்கு, கரையோரங்களில் வசித்த சுமார் 17,750 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அவர்கள் புதிய குடியிருப்புகளில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டனர். 48 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வரத்துக் கால்வாய்கள் ரொபோடிக் எக்சவேட்டர், மினி ஆம்பிபியன் வாகனங்கள் கொண்டு தூர்வாரும் பணிகள் ஆண்டு முழுவதும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

    சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைக்காலங்களில் மக்களுக்கு சேவையாற்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை முழு அளவு பணியாளர்களுடன் சென்னை மாநகராட்சியில் துவக்கப்பட்டு, தொடர்ந்து இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் மழைநீர் வடிகால் நிரந்தரத் தீர்வுக்காக அம்மாவின் ஆட்சியில் அடையாறு பேசின், கோவளம் பேசின் மற்றும் கொசஸ்தலை ஆறு பேசின் ஆகிய மூன்று பெரிய திட்டங்களை ஐந்தாண்டுகளுக்குள் முடிக்கக்கூடிய வகையில் விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டன.

    இதன்மூலம் சென்னையில் உள்ள சுமார் 2,400 கி.மீ. நீளமுள்ள வடிநீர் கால்வாய்களை இணைக்கும் திட்டம், ஜெய்கா, ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி பணிகள் தொடங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பணிகள் முடிக்கப்பட வேண்டுமென்று திட்டமிடப்பட்டு, எங்களது ஆட்சிக் காலத்தில் சுமார் 1,240 கி.மீ. நீள வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன.

    ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டங்களை முழுமையாகத் தொடர்ந்து செயல்படுத்தாததால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் தத்தளித்தன.

    2021-ம் ஆண்டு மழையின்போது குறிப்பாக, சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 விழுக்காடு நிறைவடைந்தது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், 70 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சரும், 75 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது என்று சென்னை மாநகர மேயரும், 70 முதல் 80 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது என்று தமிழக முதலமைச்சரும் உண்மைக்கு மாறாக பேட்டி அளித்து, மக்களை ஏமாற்றும் ஒரு நாடகத்தை நடத்தினர்.

    அதேபோல், 2022-ம் ஆண்டு நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் 1,200 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் சீரமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அவர்களின் கூற்றுப்படி 1,950 கிலோமீட்டருக்கு பணிகள் முழுமையாக முடிந்திருந்தால் பருவமழை தொடங்கிய ஒருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கி இருக்காது.

    கடந்த 41 மாத கால ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் முறையாகத் திட்டமிடாமல், கேபிள்கள் அமைப்பது, கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் என்று எங்கு திரும்பினாலும் சாலைகள் உடைக்கப்பட்டு, முச்சந்திகளிலும் பெரும் பள்ளம் (ஜங்ஷன் பாயிண்ட்) தோண்டப்பட்டு அவைகள் சரியாக மூடப்படாமல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பல விபத்துக்களும், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

    கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட சென்னை மயிலாப்பூரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் விழுந்து மரணமடைந்ததை அனைவரும் அறிவார்கள். இத்தகைய நிர்வாகத் திறமையற்ற ஒரு அரசை தமிழ்நாட்டு மக்கள் இதுவரை கண்டதில்லை.

    இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே, சென்னை தத்தளித்ததற்கு வெள்ள நீர் கால்வாய்கள் முழுமையாக தூர் வாராததே காரணம் என்று செய்திகள் கூறுகின்றன.

    20 செ.மீ. வரை மழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காது என்று மாற்றி மாற்றி பேசிய ஸ்டாலினின் தி.மு.க. அரசின் அமைச்சர்கள், இன்று 4 மணி நேர மழைக்கே மக்கள் தத்தளிப்பதை ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

    இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மழை வெள்ளத்தைத் தடுக்க திட்டமிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத, விளம்பர தி.மு.க. அரசினால் வீடுகளுக்குள் புகும் வெள்ள நீரால் டி.வி., ப்ரிட்ஜ், சோபா போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ, மினி வேன் வாகனங்களை ஆதாரமாகக் கொண்டு உழைக்கும் மக்கள், தங்கள் வாகனங்களை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். பெருமழையின்போது பொதுமக்கள் கண்டிப்பாக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    எனவே, இனியும் இந்த ஏமாற்று விளம்பர அரசை நம்பாமல், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நான் முன்பே குறிப்பிட்டதைப் போல் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், குடிதண்ணீர், பால், தேவையான மருந்துப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளவும். குறிப்பாக, குடிநீரை காய்ச்சிப் பருகவும் வேண்டும். தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட

    குடும்ப உறுப்பினர்கள் வெளியே செல்லும்போது, பாதையை கடக்கும் சூழ்நிலையில் மின்சார கேபிள்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த இக்கட்டான தருணத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இந்த கனமழையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை எப்போதும் போல் முன்னின்று செய்து, அவர்களின் துயர் துடைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அதேபோல், சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன? என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்று வலிறுத்துகிறேன்.

    ஸ்டாலினின் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    எனவே, ஸ்டாலினின் திமுக அரசு, மக்களை ஏமாற்றும் நாடகங்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும்.
    • 40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம்.

    வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் நாளை 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று கனமழையும் நாளை மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 8 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் அது கனமழையாக மாறியது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்ன என்று வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "சென்னையில் பெய்யும் மொத்த மழையும் எண்ணூர், நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம் ஆகிய 4 வழிகளில் மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ மழை பெய்தால் சென்னையில் ஒரு நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் சென்னையின் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும்.

    40 செ.மீ மழை பெய்தால் சென்னையில் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காக போடப்படுவது. 40 செ.மீ அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.

    • அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும்.
    • சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்கள் மிக கனமழை பெய்யும்.

    சென்னை:

    வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.

    42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும்.

    சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்கள் மிக கனமழை பெய்யும்.

    அக்டோபர் 1 முதல் தற்போது வரை 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சென்னையில் மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

    • வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2-வது வாரம் தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது.
    • இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரம் தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

    இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக என வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

    • வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் சென்னை அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான மழையை எதிர்கொள்ளவிருக்கிறது.
    • சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள். சனிக்கிழமை இரவு முதல் பெய்த மழையால் கோவை மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகரத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூரில் கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அய்யாக்கண்ணு, கடலூர் மாவட்டம் தொழுதூரை அடுத்த ராமநத்தம் பகுதியில் காயத்ரி என்ற 13 வயது சிறுமி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் குமரேசன் என மொத்தம் 4 பேர் நேற்று ஒரே நாளில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் உயிரிழந்துள்ளனர்.

    மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகச்சாதாரணமான பராமரிப்புப் பணிகளைக் கூட மேற்கொள்ளாமல் தமிழக அரசும், மின்சார வாரியமும் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளன என்பதற்கு மிகவும் வேதனையான எடுத்துக்காட்டு தான் இந்த உயிரிழப்புகள்.

    வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் சென்னை அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான மழையை எதிர்கொள்ளவிருக்கிறது. 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை மாநகரம் என்னென்ன பாதிப்புகளை எதிர்கொள்ளுமோ, சென்னை மாநகர மக்கள் எத்தகைய இன்னல்களையெல்லாம் எதிர்கொள்வார்களோ? என்ற அச்சமும், கவலையும் மனதை வாட்டுகின்றன.

    சென்னை மாநகரில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. 45-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு வரை முடிக்கப்படவில்லை. மழை-வெள்ளத்தை எதிர்கொள்ள படகுகள், நீர் இறைக்கும் கருவிகள் ஆகியவை மிகவும் அவசியம் தான் என்றாலும் கூட, அவற்றை மட்டுமே தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நம்பிக் கொண்டிருக்கின்றனவோ? என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

    சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. அவற்றை பயன்படுத்திக் கொண்டு மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித் தனி தீவுகளாக காட்சியளிக்கின்றன.
    • பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும்

    சென்னை:

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இக் கனமழையின் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் நெல் பயிரிட்ட சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்ட நிலங்கள் மழையில் மூழ்கியுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சீர்காழி மற்றும் பூம்புகார் தொகுதிகளில் வரலாறு காணாத கன மழை பெய்ததன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித் தனி தீவுகளாக காட்சியளிக்கின்றன.

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மட்டும் சுமார் 6,000 ஏக்கர் நிலங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இக் கனமழையில் மாநிலம் முழுவதும் நெல்லுடன், வாழை, நிலக்கடலை மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட னைத்துப் பகுதிகளுக்கும் அதிகாரிகளை நேரில் அனுப்பி, கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்ற ஆண்டு பெய்த கன மழையில் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை, வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை அனுப்பி, கணக்கெடுப்பு நடத்தத் தவறியதால், கணக்கெடுப்பில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட பல பகுதிகள் கணக்கெடுப்பில் விடுபட்டுவிட்டன என்று புகார்கள் வந்தன. ஒரு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டு கட்டணமாக ரூ. 300/- என்று இருக்கும்போது, தி.மு.க. அரசு பயிர் காப்பீட்டு நிவாரணமாக பெரும்பாலான விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 250/- மட்டுமே பெற்றுத் தந்துள்ளது மிகுந்த மன வேதனை அளிப்பதாக விவசாயிகள் கூறியதையும் நான் எனது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியிருந்தேன். அப்படி, அறைகுறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கூட இதுவரை 80 சதவீத விவசாயிகளுக்கு சென்ற ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு நிவாரணம் இன்று வரை வழங்கப்படவில்லை என்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் பகுதியிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இச்சூழ்நிலையில், விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டு ஒரு மாத காலத்திற்குள் தற்போது பெய்த கனமழையின் காரணமாக தங்களுடைய உழைப்பு வீணாகிப் போய்விட்டதே என்றும், தாங்கள் மேலும் கடன்காரர்களாக மாறிவிட்டோமே என்றும், தங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டதே என்றும் விவசாயிகள் மிகுந்த மனவேதனையுடன் தங்கள் மனக்குமுறலை எடுத்துரைக்கின்றனர். இதுவரை தி.மு.க. அமைச்சர்களும், அதிகாரிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை முழுமையாக பார்வையிட்டு வேளாண் பெருமக்களுக்கு எந்தவிதமான ஆறுதலையும் சொல்லாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

    இந்த ஆண்டு பயிர் காப்பீட்டிற்கான கடைசி நாள் 15.11.2022 என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் விவசாயிகளிடம் நேரில் சென்று, அவர்களது நிலங்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர, காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இந்தாண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் கட்ட வேண்டிய காப்பீட்டுத் தொகையை மாநில அரசே ஏற்று பீரிமியத்தை செலுத்த வேண்டும் என்றும் வற்புறுத்துகிறேன்.

    மேலும், தற்போது பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். 

    • வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களை தங்க வைக்க 290 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
    • முகாம்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    செங்கல்பட்டு:

    மழை தீவிரம் அடைந்து உள்ளதை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:- செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 1148 ஏரிகள் உள்ளது. இதில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 528 ஏரிகள் மற்றும் 2 தடுப்பணைகள் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மொத்த ஏரிகள் 620 ஆகும்.

    கடந்த 24 மணி நேரத்தில் எந்தவித மனித உயிர் சேதமோ, ஆடு, மாடுகள் உயிர்சேதமோ ஏற்படவில்லை. 6 குடிசைகள் சேதமடைந்துள்ளது. இவற்றில் ஒரு குடிசை முழுவதுமாகவும், 5 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்து உள்ளது.

    வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களை தங்க வைக்க 290 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. முகாம்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து வருகின்ற புகார்களை உடனுக்குடன் கண்காணித்து அவற்றின் மீது தொடர்புடைய துறைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொண்டு நிவர்த்தி செய்ய மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்கள் மூலம் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

    வாட்ஸ் அப் புகார் எண் -9444272345 கட்டணமில்லா தொலை பேசி எண்- 1077

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×