search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா அணை"

    • காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர்.
    • தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை சற்று அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 66 ஆயிரம் கன அடியாக தண்ணீர் இன்று 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களாக தொடர்ந்து நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீரானது நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 55,000 கன அடியாக அதிகரித்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 1 லட்சத்து 60,000 கன அடியாக அதிகரித்தது.

    இந்த நீர்வரத்தானது நேற்று மாலை வரை அதே நிலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் கர்நாடகா அணைகளான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு திறந்து விடும் உபரி நீர் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடியாக சரிந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தும் சரிய வாய்ப்பு உள்ளது என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக பிலிக்குண்டுலு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இன்று 3-வது நாளாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நாகர்கோவில், முதலை பண்ணை, பென்னாகரத்தில் உள்ள நாகமரை, ஏரியூர் ஆகிய காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் வெள்ளம் சூழந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களை மக்கள் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் 14-வது நாளாக தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் பரிசல் மூலம் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    இதனால் கபினி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 2284 அடியை எட்டியுள்ளது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் கபினி அணையில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடி அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தற்போது 102.35 அடியை எட்டியுள்ளது.

    தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அதன் முழு கொள்ளளவை விரைவில் எட்டி விடும் என்பதால், அணையில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீர் நேற்று மதியம் 2 மணி அளவில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தானது நேற்று நிலவரப்படி விநாடிக்கு 2,500 கன அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணமாக உள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து 22,600 கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேறவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அதேபோல சுற்றுலா பயணிகள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தப்படி சென்றனர்.

    கர்நாடகா அணைகளில் மேலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இன்று திறந்து விடப்பட்ட 22,600 கனஅடி தண்ணீர் இன்று மாலைக்குள் விரைவில் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் பரிசல் மூலம் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    • கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
    • ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன்காரணமாக குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகர் மாவட்டங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதைத்தொடர்ந்து அணைக்கு நேற்று 44ஆயிரத்து 436 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 48 ஆயிரத்து 25 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து இன்று 2688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.

    இதேபோல் நீர்வரத்து தொடர்ந்து நீடித்தால் அடுத்த ஒரு சிலதினங்களுக்குள் அணை முழு கொள்ளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் 80.51 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    கபினிஅணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீராக 11250 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

    இந்த உபரி நீரானது நாளை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திறந்து விடப்பட்டுள்ள 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தற்போது மெல்ல மெல்ல பிலிக்குண்டுலுவுக்கு வர தொடங்கியுள்ளது.

    ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன்காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். இதன் காரணமாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் பரிசலில் சென்று நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    ×