என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்மிக களஞ்சியம்"
- சரஸ்வதியின் சாபப்படி அகோர உருவம் அடைந்த பார்வதி, நாடெங்கும் அலைந்த திரிந்து திருவண்ணாமலை வந்தடைந்தாள்.
- தன்னைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதும் பேரானந்தமடைந்த சிவன், சிதம்பரம் சென்று ஆனந்த தாண்டவம் ஆடினார்.
சிவன் ஆனந்த தாண்டவம் ஆடிய தலம் சிதம்பரம் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது பிரம்மஹத்தி தோஷம் நீங்க, அன்னை பராசக்தி புற்றுவாக எழுந்தருளிய தலம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
அது, அம்மனின் சிறந்த பிரார்த்தனை தலங்களுள் ஒன்றாக விளங்கும் மேல்மலையனூர். இங்குதான் சிவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாகவும்; அதன் பின்னர் சிதம்பரம் சென்று அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாகவும் அங்காளம்மன் ஆலய தல வரலாறு கூறுகிறது.
பராசக்தி இங்கு அங்காளம்மனாக எழுந்தருளியதற்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
ஆதியில் சிவன், பார்வதியின் மூலம் அறிந்து கொண்ட பஞ்சமுக மந்திரத்தை உச்சரித்து, பஞ்சமுக சிவன் ஆனார். அதைக் கண்ட பிரம்மனுக்கும் பேராசை பிடித்துக் கொண்டது. தனக்கும் ஐந்தாவது தலை வேண்டுமென்ற வரத்தை சக்தியிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
ஐந்தாவது தலை கிடைத்ததும், தலைக்கணமும் ஏறியது பிரம்மாவுக்கு சிவனுக்குச் சமமாக தாமும் இருக்கிறோம் என்ற ஆணவத்தோடு நடக்கத் தொடங்கினார். ஆகவே, பிரம்மாவின் ஐந்தாவது தலையை அழித்துவிடச் சொல்லி, பரமசிவனிடம் முறையிடுகிறாள் பார்வதி.
இறுதியில் விஷ்ணுவின் யோசனைப்படி பிரம்மாவிடம் வலியச் சண்டைக்குச் செல்கிறார் பரமன். சண்டையில் பிரம்மாவின் தலையை அறுத்த சிவன், அதைக் கீழே போடாமல் கையிலேயே தாங்கிக் கொண்டார். பிரம்மா முன்பு போல் நான்கு தலைகள் கொண்டவரானார். ஆனால், இந்தச் சம்பவத்தால் சிவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
தன் கணவரின் நிலையறிந்த சரஸ்வதி, சிவன் மீது கடும் கோபம் கொண்டாள். அவரை நோக்கி, "என் கணவரின் ஐந்தாவது தலையை உன் கையை விட்டு கீழே விழாமல் ஒட்டிக் கொள்ளட்டும். உனக்கு உணவு, படுக்கை, தூக்கம் எதுவும் இல்லாமல் போகட்டும். சுடுகாட்டின் மூன்று பிடி சாம்பல்தான் உன் பசி தீர்க்கும்' என்றும்; பார்வதியிடம், "என் கணவர் அலங்கோலமாய் போனதற்குக் காரணமான நீயும் அலங்கோலமாய் போவாய். உனது தாதிப்பெண்கள் பூதகணங்களாகப் போவார்கள். நீ பிணத்தைத் தின்று, மதுவைக் குடித்து அகோர உருவம் தாங்கி அலைய வேண்டும்' என்றும் சாபமிட்டாள்.
இவை அனைத்தையும் மகாவிஷ்ணு மோகினி அவதாரத்தில் வந்து அறிந்தார். பார்வதியிடம் "நீ மேல்மலையனூரில் பூங்கா வனத்தில் புற்றில் பாம்பு உருவாக இருக்கும்போது உனக்கு சாபவிமோசனம் கிட்டும்' என்று சொல்லி, ஆறுதல் கூறினார்.
சரஸ்வதியின் சாபப்படி அகோர உருவம் அடைந்த பார்வதி, நாடெங்கும் அலைந்த திரிந்து திருவண்ணாமலை வந்தடைந்தாள். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி எழுந்தபோது அவளுடைய அகோர உருவம் நீங்கி, மூதாட்டி உருவம் பெற்றாள். பூதகணங்களும் பழையபடி பெண்களாயினர்.
திருவண்ணாலையிலிருந்து மேல்மலையனூருக்குக் கிளம்பினாள் பார்வதி. வழியில் மேல்மலையனூர் ஏரியை வந்தடைந்த அம்மன், அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த தாசன் மற்றும் அவனுடைய மகன்களான வீரன், சூரன், உக்கிரன் ஆகியோரிடம், "உங்களுக்கு கிடைக்கும் மீனை எனக்கு படையுங்கள்' என்றாள்.
வீரனின் வலை ஓட்டையாக இருந்தாலும் மீன்களைப் பிடித்து அன்னைக்குப் படைத்தான். மகிழ்ச்சியடைந்த பார்வதி புற்றாக உருவெடுத்து அவர்களுக்கு காட்சி கொடுத்தாள்.
"நான் சரஸ்வதியின் சாபத்தால் இங்கு இருக்கிறேன். என்னை பூஜித்து வந்தால் உங்கள் பரம்பரையை வாழ வைப்பேன். இந்தப் புற்றுமண்ணை பிரசாதமாக உட்கொண்டால் பலவித பிரச்னைகள் தீரும்' என்று அருள்வாக்குக் கூறி மறைந்தாள்.
புற்றுமண்ணின் ஆற்றலை அறிந்த சிவன் மேல்மலையனூர் வந்தார். மயானத்தில் மூன்று பிடி சாம்பல் சாப்பிட்டார். அவரது பித்தம், பசி ஓரளவு நீங்கியது. கணவர் பழைய நிலையை அடைய, அண்ணன் விஷ்ணுவை தியானித்தாள் பார்வதி.
பார்வதி முன் விஷ்ணு தோன்றி, "உன் கணவருக்குக் கிடைக்கும் உணவுப்பொருள்களை அவரது கையில் உள்ள பிரம்ம கபாலமே தின்றுவிடுகிறது. எனவே நீ அறுசுவை உணவை சமைத்து, அதை மூன்று கவளமாக்கி, அதில் இரண்டு கவளத்தை பிரம்ம கபாலத்திற்குப் போடு. மூன்றாவது கவளத்தை கைத்தவறி கீழே போடுவதுபோல் தரையில் போடு. பிரம்ம கபாலம் அதை எடுக்க உன் கணவரின் கையைவிட்டு கீழே இறங்கும்போது, நீ பிரமாண்ட உருவமெடுத்து அதை காலால் நசுக்கி விடு. நீ உணவு தயாரிக்க லட்சுமியும் அவளிடம் உள்ள அமுதசுரபி பாத்திரமும் உதவுவார்கள்' என்று சொல்லி, சிவனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்குவதற்கான வழிமுறையைக் கூறினார்.
பார்வதியும் அதன்படியே காலால் நசுக்க, அலறிய பிரம்ம கபாலத்திடம், "உனக்கு வேண்டிய உயிர்ப்பலி எல்லாம் பிறகு வரும்' என்று கோபமாகக் கூறினாள். அன்றிலிருந்து பிரம்ம கபாலம் அன்னையின் காலடியிலேயே கட்டுண்டுக் கிடக்கிறது.
தன்னைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதும் பேரானந்தமடைந்த சிவன், சிதம்பரம் சென்று ஆனந்த தாண்டவம் ஆடினார்.
பிரம்ம கபாலத்தை காலால் நசுக்கியும் அன்னையின் கோபம் தணியாததால் தேவர்களும் முனிவர்களும் அம்மனை தேரில் எழுந்தருளச் செய்து அவளது கோபத்தைத் தணித்தார்கள். பின் சுய உருவம் பெற்ற அம்மன் அன்றிலிருந்து அங்காள பரமேஸ்வரியாக மேல்மலையனூரில் அரசாட்சி நடத்தி வருகிறாள்.
மகாமண்டபத்தில் அங்காளம்மன் புற்றாகவும் கருவறையில் திருவுருவம் கொண்டு சிவனுடனும் அருள்பாலிக்கிறாள். அவளது உற்சவத் திருமேனி கல்மண்டபத்தில் உள்ளது இங்குள்ள சுயம்பு புற்றுருவம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. முற்காலச் சோழர்களால் மூலவர் திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்னபூரணி, கோபால விநாயகர், பாவாடைராயர், தெற்குக் குளக்கரையில் பெரியாயி ஆகியோருக்கும் தனிச்சன்னதி அமைந்துள்ளது.
இங்கு தேர்த்திருவிழா, மயானக்கொள்ளை விழா, தீமிதி விழா என மகாசிவராத்திரியன்று தொடங்கி 13 நாள் உற்சவம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. தீமிதி விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வது கண்கொள்ளாக் காட்சி. அது தவிர அமாவாசை, பௌர்ணமி, ஆடி வெள்ளி, நவராத்திரி, கார்த்திகை தீபம், பொங்கல் ஆகிய முக்கிய விழாக்களும் சிறப்பிக்கப்படுகின்றன.
அமாவாசையன்று நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப்பாடல்களும் தாலாட்டுப்பாடல்களும் பாடி ஆராதனை செய்வதிலிருந்து அங்காளம்மனின் ஆற்றலை அறிந்துகொள்ளலாம்.
மயானக்கொள்ளையன்று பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ள விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனைச் சாந்தப்படுத்த தேவர்கள் ஒன்றுகூடி தேரின் பாகங்களாக இருந்து தேர்த்திருவிழா எடுப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே தேரில் பவனி வரும் அங்காளம்மனை வணங்கும்போது சகலதேவர்களையும் வழிபட்ட புண்ணியம் கிட்டுகிறதாம்.
பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் செய்யப்படுகிறதாம். மாட வீதிகளில் தேர் உலா வரும்போது பக்தர்கள் நாணயங்கள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை தேரின் மீது எறிந்து நன்றிக்கடனைச் செலுத்துகின்றனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பில்லி சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு மயான சாம்பலுடன் குங்குமம், புற்றுமண் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு. இவை பல நோய்களைக் குணப்படுத்துவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.
பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற கபால வேடமிட்டு மஞ்சள் ஆடையுடுத்தி வருவதும், பெண்கள் வேப்பஞ்சேலை கட்டிக் கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்வதும் இத்தலத்தில் வாடிக்கை. மேலும் பிரகாரங்களில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், ஆடு, மாடு, கோழியை காணிக்கையாகச் செலுத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
தினசரி தரிசனத்திற்காக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும்; அமாவாசையன்று இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.
- கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
- அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.
திரிம்பகேஸ்வரர் கோவில், திரிம்பாக் திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான இந்துக் கோவில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.
- ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி.
- சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் மும்மூர்த்திகள் ஆவார்.
திருக்கோயில் பெயர்: அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்
காலம்: சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர்
இறைவன் பெயர்: தாண்டேஸ்வரர்
இறைவியின் பெயர்: தாண்டேஸ்வரி (எனும்) அங்காளம்மன்
தலவிருட்சம்: வில்வம், வாகை
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
ஆறு: சக்கராபரணி
ஸ்ரீ அங்காளம்மன் தல வரலாறு
ஆதி சதுர்யுகத்தில் கிரேதாயுதத்திற்கு முன்பான மணியுகத்தில் முதல் மூர்த்தியான சிவபெருமானின் பிரம்மஹத்தி தோசம் நீக்கியும், கலியுகமாந்தர்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டும் அன்னை பராசக்தி சிவ சுயம்பு மண்புற்றுவாக திரு அவதாரம் செய்து ஸ்ரீ அங்காளம்மனாக அருள்பாலிக்கும் புண்ணியத் தலமே மேல்மலையனூர் ஆகும்.
ஸ்ரீ அங்காளம்மன் அவதாரம்
அகிலாண்டகோடி என்றும், பிரம்மாண்டநாயகி என்றும், ஆதி சக்தி என்றும், பராசக்தி என்றும், போற்றுதலுக்கும், புகழ்தலுக்கும், வணங்குதலுக்கும், குலதெய்வமாகி அருளும் தலைமைத்தாய் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற முப்பெருந்தேதியராகி முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளுடன் இணைந்து முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்ததாகவும், இந்த ஆதி சக்தியான அங்காளி ஐந்து உற்சவங்களில் தனித்த சக்தியாகவே இருந்ததாகவும், ஆறாவது உற்பவத்தில் தக்கனுக்கு மகளாக தாட்சாயணி தேவியாக அவதரித்ததாகவும், அனைத்து ஆற்றலையும் பெறத்தக்க விதங்களில் தக்கன் செய்த யாகத்தை அழிக்கக் கருதிய தாட்சாயணி தேவியின் கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற சிவசக்தியின் பஞ்சமுக தத்துவமாகி சத்யோஜாதம், வாமவேதம், ஈசானம், தாத்புருஷம், அகோரம் என்ற திருமுகக்கணல் பொறிகளாக ஒன்று திரண்ட உருவமற்ற அசரீரியே அங்காளி ஆகும்.
ஆவி, ஆன்மா என்ற உயிராக, உயிரியாக, உருவமாகி விளங்கிடவே பருவதராஜன், மேனை என்பாருக்கு "பார்வதி" என்ற பெயரில் திருமணச்சடங்கின் மூலம் ஆதி சிவனுடன் ஈஸ்வரியாக இணைந்தாள்.
சக்தி பீடங்கள் தோன்றி அருளல்
தக்கன் யாகத்து தீயில் உயிரைவிட்ட தாட்சாயணி தேவியின் பூதஉடலை சிவபெருமான் தாங்கொண்ணா துயரச் சீற்றத்தில் தன் தோள்மீது சுமந்து நர்த்தண தாண்டவம் ஆடி, உடல் உறுப்பு துணுக்குகளை சிதைத்து சிதறுர செய்துவிட்டார். அந்த உடல் உறுப்பு துணுக்குகள் விழுந்த இடங்களே மகிமைமிகு சக்தி பீடங்களாகும். எண்ணற்ற சக்தி பீடங்கள் தோறும் உருவ சக்தியாக விளங்கி அருள அங்காளியே, சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, ஆயி, பெரியாயி, மகமாயி, அங்காயி, மாக்காளி, திரிசூலி, காமாட்சி, மீனாட்சி, அருளாட்சி, அம்பிகை என்ற எண்ணற்ற பெயர்களில் சக்திபீட தேவதையாக விளங்கி அருள்பாலிக்கின்றாள்.
மேல்மலையனூர் - முதல் சக்தி பீடம்
மேல்மலையனூர் ஆதியில் தண்டகாரண்யம். சிவபெருமான் தாட்சாயணிதேவியின் பூதஉடலை சுமந்து நர்த்தனதாண்டவம் ஆடியபோது தாட்சாயணி தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே, இந்த தண்டகாரண்யம் என்ற இந்த மேல்மலையனூர் ஆகும்.
சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது
முத்தொழிலையும் ஏற்று நின்ற மூம்மூர்த்திகளில் தாங்களுக்குள் யார் பலசாலி, பெரியவர்கள் என்ற வீணான சர்ச்சையால் சிவபெருமான் கோப ஆவேசத்தில் பிரம்மாவின் சிரசை கொய்து சிவன் பிரமதோஷம் கொண்டான். அது முதல் பித்தன், பேயன் என்றாகி சுடுகாடு தோறும் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக தண்டகாரண்யம் என்ற மேல்மலையனூருக்கு வருகிறான்.
சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் மேல்மலையனூரில் விலகியது.
மாசி மாதம் சிவன் ராத்திரிக்கு மறுநாள் பூரண அமாவாசை தினம். அன்றுதான் அனைத்து மூலாதார சக்தியான அங்காளி ஒன்று திரண்ட சிற்சக்தி என்ற ஒரே சிற்சக்தியாக விளங்கி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் சூரையிடும் நாள். அதையே மயானக்கொள்ளை என்று கூறுவர். மலையனூரின் தேவதையான பூங்காவனத்தாய் ஒரே சிற்சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூரையை இறைக்கும்போது சிவனாரைப் பற்றி இருந்த பிரம்மன் ஆவி, ஆன்மா என்ற பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிடும் சமயம் சிவபெருமான் தாண்டி ஓடி "தாண்டவஈஸ்வரனாகவும்" தாண்டிய இடமான மேல்மலையனூரில் "தாண்டேஸ்வரராகவும்" அமர்ந்தார். தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.
மேல்மலையனூரில் அங்காளி "ஸ்ரீ அங்காளம்மனாக அமர்ந்தது"
சிவபெருமானைவிட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்ட பிரம்மன் என்ற ஆவி, ஆன்மா சாப்பிட்டு முடித்தபிறகு மீண்டும் சிவபெருமானை பற்றிக்கொள்ள, பிடித்துக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானதைக் கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள். இந்நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு அவர்கள் விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மன் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைந்துவிட்டதாகவும், சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்றே சிவ சுயம்பு உருவமாகி அப்புற்றுக்குள் குடி கொண்ட கோயில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றதாகவும் கூறுவர்.
இந்த நிகழ்வுகளை கண்ணுற்ற பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டிலிருக்கும் மிருக கணங்கள், வனத்திலிருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றதாகவும், அதற்கும் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லாத காரணத்தால், விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமாக ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுததாகவும், அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லாத காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வரும் போது கலியுகம் பிறந்ததாகவும், கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து நாம் எல்லோருக்கும் அருளும் அருள் அம்பிகையான அம் காளம் அம் அன் ஸ்ரீ அங்காளம்மனாக அமர்ந்ததாக வரலாறு.
ஸ்ரீ அங்காளம்மன் திருவிழாக்கள் தோற்றம்
அம்மனின் வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரவே எழுந்த நாட்களே திருவிழாவாகும். மாசிமாதம் சிவன்ராத்திரி அன்று சிவபெருமான் வந்து தங்கிய இரவை சிவன்ராத்திரி என்றும் அன்றே இரவில் சக்தி கரக திருவிழா என்றும், மறுநாள் பூரண அமாவாசை தினம் அன்றே சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி விலகி அங்காளி அங்காளம்மன் ஆனாள் என்று அறிந்த வண்ணம் அன்றைய தினத்தையே மயானக்கொள்ளை என்றும் இரண்டாம் நாள் திருவிழா என்றும் இன்று இரவுதான் "ஆன்பூதவாகனத்தில் அம்மன் பவனி" என்றும் மறுநாள் பெண் பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும், நான்காம் நாள், சிங்கவாகனத்தில் அம்மன் பவனி என்றும் ஐந்தாம் நாள்,
அன்னவாகனத்தில் அம்மன் பவனி என்றும் அன்று பகலில் அம்மனுக்கு சீற்றம், கோபம், ஆவேசம், ஆத்திரத்தின் நிலையாக கருதி தற்காலம் தீமிதி திருவிழா என்றும் ஆறாம் நாள், தேவர் உலகத்தில் இருந்து வந்த வெள்ளை யானையில் அம்மன் பவனி என்றும் ஏழாம் நாள் தேவர்களின் உருவமாகிய திருத்தேரில் அம்மன் பவனி என்றும், எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை குதிரைவாகன பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த நாக வடிவில் 9 தலைக்கொண்ட நாகத்தில் அமர்ந்த 9 தலை நாக வாகன பவனி என்றும், பத்தாம் நாள் அனைத்து ஆபரணங்களையும் கொண்ட "சத்தாபரண திருவிழா என்றும், தெப்பல் திருவிழா" என்றும் ஆதி முதல் இன்று வரையில் என்றும் பழைமைக் குன்றாத ஆதி திருவிழாவாகக் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு. அம்மன் வரலாற்றை தொடர்புபடுத்தி வேறு எங்கும் இதுபோன்ற திருவிழா கொண்டாடவில்லை என்பதும் தனி சிறப்பு.
அங்காளம்மனுக்கு திருவிழா கொண்டாடுவது
கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும். அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி விலகிய நாள். அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள். சிவசுயம்பு புற்றுருவாகவும், புற்றுக்குள் குடி கொண்ட நாக நடிவமாகவும் ஆனாள் என்று அறிந்த வண்ணம் நாகத்தின் படிம் சுருங்காமல் சீறிபாயும் நிலையில் இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளைக் கண்ணுற்ற, பூலோகத்தில் இருந்த பூ கணங்களான, ஆண்பூதம், பெண்பூதம், மிருக கணங்கள், பறவை கணங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த வண்ணம் வகை வகையாக வந்து அப்புற்றை சுற்றி பணிந்து தொழுததாக அறிந்தோம்.
அதற்கும் அந்த நாகப்பாம்பு படம் சுருங்காமல் இருப்பதை கண்ட பூலோக கணங்களில் வேண்டுகோளுக்கு இணங்க தேவர் உலக தேவர்கள் தாங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகமான இப்புற்றை வந்து தொழுது நின்றதாகவும், அதற்கும் இந்த நாகப்பாம்பின் படம் சுருங்காமல் இருப்பதைக் கண்ட தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் திருவுருவமாக "திருத்தேர் ஆகி" நின்ற அப்புற்றை சுற்றி வரும் போது அப்போது கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறிந்த வண்ணம், இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.
மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவை சிவன் ராத்திரி என்றும், அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும், மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூரையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும் அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள். ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம், இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்னும், மூன்றாம் நாள் பெண்பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும், நான்காம் நாள், காட்டில் இருக்கம் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும்,
ஐந்தாம் நாள் வனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகத்தில் அம்மன் பவனி என்றும், அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் மற்றும் ஆறாம் நாள் தேவர் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும், மற்றும் ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் என்பதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும்,
எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூரவே குதிரைவாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூரவே 9 தலை நாகவாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும். தற்கால திருவிழாவாக அங்காளம்மன் வார வழிபாட்டு மன்றத்தில் சார்பாக ஐந்தாம் நாள் பகல் உற்சவமாக "தீமிதி" திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நிறைவு கூரவே, ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வேண்டுதல் பெயரில், மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது, மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான, பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கை உருபடிகளை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து செல்வரே இந்த பத்து நாள் திருவிழாவாகும். இந்த அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா வேறு எங்கும் கொண்டாடுவதில்லை. இந்த மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருவதால் ஏற்படக்கூடிய பயன்கள்
ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி. இதையே ஆற்றலாக கருதும்போது, விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவாற்றல், இதையே தெய்வமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, இதையே வாழ்க்கையின் நிலைகளாக, கல்வி, செல்வம், வீரம் என்று கொள்கிறோம். லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவை இணைந்த ஒரே உருவான சிற்சக்தியே, அங்காளி என்ற உருவ மற்ற சக்தி ஆகும். அங்காளம்மன் உருவ சக்தியே அங்காளம்மன். அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர். இதுவே தலைமையிடமாகவும், இந்த கோயிலில் உள்ள தேவதையே தலைமைத்தாய், மூலதாய், முதன்மைத்தாய், குலதெய்வம் என்றும் வழிபாடு செய்கிறோம். இதுவே வம்சாவழியாக செய்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகள்.
குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு தங்களின் வம்சாவழியினராக தங்களின் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருடன் ஒன்று சேர்ந்து வந்து மொட்டை அடிப்பது காதணி விழா செய்வது, அபிஷேகம் செய்வது, ஆராதனை செய்வது, அர்ச்சனை செய்வது, பொங்கல் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்யும் வழிபாட்டு தெய்வமாக அங்காளம்மன் விளங்குகின்றாள்.
இந்த ஆற்றல் மிகு சக்தியின் துணைவர், கணவர், இறைவன் என்று போற்றப்படுபவர். முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் மும்மூர்த்திகள் ஆவார். இந்த மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிரம்மஹக்தி தோஷம் பிடித்துவிட்டதாகவும், இந்த பிரம்மஹத்தி தோஷத்தை அங்காளியான இந்த அங்காளம்மன் மாசி மாதம் விலக்கியதாகவும் அறிந்த வண்ணம், சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானின் பிரம்மஹத்தியை விலக்கியதைப் போன்றே மானிடராகிய மக்களின் துன்பம், துயரம், பிணிகள், பீடைகள், சகடைகள், தோசம், பில்லி வைப்பு, சூன்யம், ஏவல், காட்டேரி சேட்டைகள், சகடைகள் போன்றவற்றை விலக்கி நல்வாழ்வு தரும் தெய்வம், வழிபாட்டு தெய்வம் அங்காளம்மன் ஆகும். பிரம்மஹத்தியில் இருந்து சிவபெருமானை விடுவித்த அங்காளி மானிடங்களின் இந்த ஆன்ம பிணிகளைப் போக்கிடுவாள் என்று கருதியே மேல்மலையனூரை தலைமையிடமாக ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து காணிக்கை பிராத்தனைகளை செய்து நல்லருள் பெற்று செல்கின்றனர்.
தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருவதால் ஏற்படக்கூடிய பயன்கள்
ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும். மனித இயக்க ஆற்றல் சக்தியாக தெய்வ தேவதையாக ஏற்றுக் கொள்ளும்போது உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண், பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும். அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை. இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள் அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம். இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியாங்குபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.
ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கந்தாயப்பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது. சித்த பிரமை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையான மாசி மாதத்தில் என்பதும், மும்மூர்த்திகளில் முதல் மூர்த்திக்கே பிரம்மஹத்தி பிடித்ததைப்போன்று மானிடர்களாகிய மனிதர்களை ஏன் பிரம்மஹத்தி பிடித்திருக்காது? என்பதாக கருதியே ஆன்ம பிணிகளாக பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம், துயரம் பிரம்மஹத்தி என்ற ஆன்ம பிணிநோய்கள் விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரம்மஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.
கந்தாயங்கள் மொத்தம் நான்கு. இதையே ஒரு எலுமிச்சை பழமாக கருதி நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி, ஆன்ம பிணிகள் பீடிக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி அடங்கிய தலையை சுற்றி கைகால் முதல் தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும் , பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம். இதுதொன்று தொட்டு வந்துள்ள பழமை பிரார்த்தனையாகும். இதை ஆதிக்குடிகள், குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை என்ற ஐந்து நிலப்பிரிவுகளிலும் வாழ்ந்த ஆதிக்குடிகள் இவ்வாறே வழிபாட்டை செய்து இருந்தனர்.
அங்காளம்மன் என்ற இந்த தொன்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர். அவ்வாறே பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர். அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோஷங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்ட, செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் கொண்ட மகிமைமிகு சக்தி பீடம் அமைந்துள்ள ஊரே மேல்மலையனூர். இவ்வூர் திருவண்ணாமலையில் இருந்து கிழக்கே 35 கிலோ மீட்டர் தூரத்திலும், செஞ்சிக்கு வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து தென்மேற்கில் திண்டிவனம் வழியாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும் மேல்மலையனூர் அமைந்துள்ளது.
இவ்வூரின் அருகில் உள்ள ரெயில் நிலையங்கள், திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், காட்பாடி ஆகும். அருகில் உள்ள விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட் ஆகும்.
மேல்மலையனூர்-சென்னைக்கு செஞ்சி திண்டிவனம் வழியாகவும், சேத்துப்பட்டு, வந்தவாசி வழியாகவும் அடிக்கடி செல்ல பஸ் வசதி உள்ளது மற்றும் மேல்மலையனூர்-செஞ்சி, திண்டிவனம், பாண்டிக்கும் மேல்மலையனூர்-விழுப்புரம் கடலூர் சிதம்பரத்திற்கும், மேல்மலையனூர்-ஆரணி வேலூர் செல்லவும், மேல்மலையனூர்-அவலூர்பேட்டை வழியாக, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை செல்லவும், மேல்மலையனூர்-திருவண்ணாமலை வழியாக பெங்களூரு செல்லவும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், திருவிழா காலங்களில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
செஞ்சி-மேல்மலையனூர், திண்டிவனம்-மேல்மலையனூர், பாண்டிச்சேரி - மேல்மலையனூர், திருவண்ணாமலை-மேல்மலையனூர், விழுப்புரம்-மேல்மலையனூர், வேலூர், ஆரணி, சேத்துப்பட்டு-மேல்மலையனூர், பெங்களூரு-மேல்மலையனூர் ஆகிய ஊர்களில் இருந்து நேரடியாக செல்ல பஸ் வசதி உள்ளது. மேலும் பலதரப்பட்ட ஊர்களில் இருந்து வருபவர்கள் இந்த ஊர்களுக்கு வந்து செஞ்சி, சேத்துப்பட்டு, வளத்தி வழியாக மேல்மலையனூர் வந்தடையலாம்.
- பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார்.
- கடும் பசியில் இருக்கும் சிவனுக்கு பார்வதி தேவி கொடுக்கும் உணவை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டுள்ள பிரம்ம கபாலம் உண்டு விடுகிறது.
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இங்குள்ள அக்னி குளத்தில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் இந்த அக்னி குளத்தின் சிறப்பும் புராணமும் தெரிந்திருப்பதில்லை.
பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு சரஸ்வதி தேவி கொடுக்கும் சாபத்தினால் கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. இந்த கபாலம் சிவனுக்கு படைக்கும் உணவை உண்டு விடுவதால் பசியால் வாடிய சிவபெருமானுக்கு பித்து பிடித்து காடு மலைகளில் சுற்றி திரிந்தார்.
இதை பார்த்த பார்வதி தேவி மகாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார். மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின்போது சிவபெருமானுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என மகாவிஷ்ணு கூறியதுடன் சாப விமோசனத்திறக்காக வழியையும் கூறுகிறார்.
இதன்படி பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார். பார்வதி தேவி திருமண வயதை அடைந்திருந்த நேரத்தில் காடுமலைகளில் சுற்றி திரியும் சிவபெருமான் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார். சிவபெருமான் வந்துருப்பதை அறிந்த கொள்ளும் பார்வதி தேவி மறுநாள் நடக்கும் மயானக்கொள்ளையில் சிவனுக்கு படைக்க சுவையான உணவை கொண்டு வருகிறார்.
கடும் பசியில் இருக்கும் சிவனுக்கு பார்வதி தேவி கொடுக்கும் உணவை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டுள்ள பிரம்ம கபாலம் உண்டு விடுகிறது. உணவை எடுக்க சிவபெருமானின் கரத்தில் இருந்த விடுபட்டு கீழே இறங்கும் பிரம்ம கபாலத்தை பார்வதி தெவி விஸ்வரூபம் எடுத்து தனது காலால் பூமியில் மிதித்து ஆட்கொள்கின்றார். இதன் பிறகு சிவபெருமானுக்கு சாப விமோசனம் ஏற்படுகிறது.
கோபத்தினால் அக்னி பிழம்பாக மாறும் பார்வதி தேவி இங்குள்ள அக்னி குளத்தில் குளித்ததாக புராணம் கூறுகிறது.
இதன் பிறகும் தனியாத பார்வதி தேவியின் கோபத்தை தணிக்க தேவர்கள் ஒன்று கூடி தேர் திருவிழா நடத்தினர். இதில் தேவர்களே தேரின் பாகங்களாக இருப்பது விழா எடுக்கின்றனர். இந்த விழாவே இன்று வரை மேல்மலையனூரில் மாசி திருவிழாவாக நடந்து வருகிறது.
இந்த பகுதி மக்கள் அக்னி குளத்தை புனிதமாக நினைத்து இதில் குளிப்பதை தவிர்த்தனர். மேலும் குளத்தின் நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். பக்தர்கள் நீராடி வேண்டுமென்றால் குளத்தில் எடுத்து வந்து ஒதுக்குப்புறமாக குளித்தனர்.
தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் குளத்தின் மையப்பகுதிக்கே சென்று குளிக்கின்றனர். மேலும் ஒரு படி மேலே சென்று அணிந்திருக்கும் துணிகளை குளத்தின் உள்ளே போட்டுவிடுகின்றனர். இதனால் இதை அறியாத சில பக்தர்கள் குளத்தினுள் இறங்கும்போது துணிகளில் சிக்கி விபத்துகள் பல நேர்ந்து இருக்கின்றன.
இனியாவது பக்கதர்கள் குளத்தின் புனிதத்தை உணர்ந்து குளத்தினுள் இறங்கி குளிப்பதை தவிர்த்தாலே அம்மனின் பூர்ண அருள் கிடைக்கும்.
- சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலைரனூரை சுற்றி வருகிறது.
- சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது.
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலைரனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரியின் ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து மேல்மயைனூர் அக்னி குலக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கிரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருள்ளாட்டம் ஆடி வருவார்.
பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஷ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடிசாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழா உருவாகின.
சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கிரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும் மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்லமாட்டார்.
- திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
- பிரம்மாவே இங்கு யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார்.
இமயத்தில் சிவபெருமானை உதாசீனம் செய்துவிட்டுத் தக்கன் யாகம் செய்தார். தமது கணவனை அவமதித்த தங்கள் யாகத்தை தடுக்கச் சென்ற பார்வதி தேவியைத் தக்கன் அவமதித்து விட்டார். அதனால் பிராணத்தியாகம் செய்த பார்வதி தேவியின் உடலை, சிவபெருமான் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தார். இதனைப் பார்த்த திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலின் பாகங்களைத் துணித்தார். ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு பாகம் விழுந்தது. ஆவேசம் தணிந்த சிவபெருமான் மகாமயானமான காசிக்கு, மீதமுள்ள உடல் பாகத்தைக் கேதார நாத்திலிருந்து கொண்டு வந்தார். மகாமயானத்தில் பார்வதி தேவியின் உடலை அக்கினியில் இடமுனைந்தார்.
சிவபெருமான் பார்வதி தேவியின் காதில் தாரக மந்திரம் உபதேசம் செய்தார். அப்போது அவரது காதிலிருந்த காதணி எங்கேயோ விழுந்து விட்டதை அறிந்தார். அப்போது அங்கே திருமால் தமது சக்கரத்தால் ஒரு தீர்த்தக் கிணறு தோண்டி, அதனருகே அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தார். சிவன் அவரை அணுகி பார்வதி தேவியின் காதணி பற்றிக் கேட்டார். திருமால் தாம் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே உள்ள கிணற்றைச் சுட்டிக் காட்டினார். சிவபெருமான் அக்கிணற்றை எட்டிப்பார்க்கையில் அவரது காதிலிருந்த குண்டலமும் கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றினுள்ளிலிருந்து பிரகாசமான பேரொளியுடன் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்தச் சிவலிங்கத்தில் சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் ஒன்றாக ஐக்கியமாகி இருந்தது.
திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பெருமானை நோக்கித் தமது தவத்தை தொடர்ந்து மேற்கொண்டார். சிவபெருமான், திருமால் முன்பு விசுவரூபம் கொண்டு தோன்றினார். திருமால் விரும்பும் வரம் யாதெனக் கேட்க, அவர் இங்கு பிரதிஷ்டை செய்த ஜோதிர் லிங்கத்திலிருந்து எப்போதும் மக்களை ஆசிர்வதிக்க வேண்டினார். மேலும் சிவபெருமான் ஜடாமுடியிலிருக்கும் கங்கை இத்தலத்தில் வந்து சிவபெருமானை அர்ச்சிப்பதுடன், இத்தலம் வந்து கங்கையில் நீராடும் மக்களுடைய பாவங்களைப் போக்க வேண்டும் எனவும், சிரார்த்தம் செய்தால் அவர்கள் பாவம் எல்லாம் விலகி புனிதம் அடைந்து சுவர்க்கம் போக வேண்டும் எனவும் வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரம் தந்து, தாமும் அந்த லிங்கத்தில் ஒளியாக ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருமாலுக்கு விசுவரூபம் காட்டித் தந்தமையால், சிவலிங்கத்திற்கு விசுவநாதர் எனப்பெயர் உண்டாகியது. .
அதன்பின்பு விசாலாட்சியாக அவதாரம் கொண்டிருந்த அன்னை பார்வதி தேவியை, சிவபெருமானுக்குத் திருமால் திருமணம் செய்து வைத்தார். பிரம்மதேவர் பல யாகங்கள் செய்து அவர்கள் திருமணத்திற்கு உதவி செய்தார். இவ்வாறு திருமாலின் வேண்டுதலின்படி ஜோதிர்லிங்கமாகத் தோன்றிய சிவன் விசுவநாதர் என வழங்கப்பட்டு வருகிறார். காசியைப் பற்றி ஏகப்பட்ட புராணக் கதைகள் உள்ளன. ஏனெனில் காசியம்பதி வேதகாலம், புராண காலத்திற்கு முற்பட்டது. பல தேவர்களும், முனிவர்களும், மன்னர்களும், இங்கு தவம்செய்து பேறு பெற்றுள்ளார்கள். சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், பதவி பெற்றார். சனிதேவன் சிவபெருமான் அருளால் நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகப் பதவி பெற்றார்.
பிரம்மாவே இங்கு யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார் எனில், காசியின் மகிமையும் தொன்மையும் யாரால் எடுத்துக் கூற முடியும்? சப்தரிஷிகள் என்னும் ஏழு ரிஷிகளும் இங்கு தவம் செய்து, சிவபெருமான் அருளால் நட்சத்திரப் பதவியடைந்துள்ளார்கள். காசியில் இரவு பூஜை சப்த ரிஷிகள் பூஜை என மிகவும் சிறப்பாக, தினசரி நடைபெறுவதால் இத்தலத்தை அவர்கள்தான் தாபித்தார்களோ என ஓர் எண்ணம் உண்டாகிறது. இராமபிரான் முன்னோர்களில் ஒருவரான ஹரிச்சந்திரன் வரலாறு அறியாதோர் இலர். அவர் விசுவாமித்திரர் சோதனைக்குட்பட்டு காசியில் வந்து சுடலையைக் காத்து, மனைவியைப் பிறர்க்கு விற்றுத் துன்பப்பட்டும், பொய்யே பேசாமல் முடிவில் சிவபெருமான் அருளால் இழந்த செல்வம் எல்லாம் பெற்று சுபிட்சம் அடைந்தார். இதிசாக காலத்தில் இராமர் இங்கிருந்து சிவலிங்கம் கொண்டு சென்று, இராமேசுவரத்தில் வைத்து வழிபட்டு, இராவணனை வதைத்த தோஷம் நீங்கப் பெற்றார் என இராமயணத்தில் வரலாறு காண்கிறோம்.
மகாபாரதக் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காசி வந்து வழிபாடுகள் செய்ததாகவும் மகா பாரதத்தில் வரலாறு கூறப்படுகிறது. இன்னும் இப்படி எத்தனையோ புராணங்கள் காசிப் பதியைப் பற்றியுள்ளன. புராண காலத்தில் சத்தியபுரம் என்னும் ஊரில் பூரித்தியும்னன் என்பான் அரசாண்டு வந்தான். அவனுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள். இன்பத்தில் மூழ்கியிருந்ததால் அவனால், அரசாட்சியை சரிவர கவனிக்க இயலவில்லை. இதனைச் சாதகமாக்கி அவனது விரோதிகள் அவனை நாட்டை விட்டுத் துரத்தி விட்டனர். விபாவரை என்னும் தமது பட்டத்து ராணியை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, மன்னன் விந்திய மலைச்சாரலில் வந்து வாழ்ந்து வந்தான். வறுமையின் கொடுமையால் தன் மனைவியையே கொன்றுவிட்டான். அவள் மாமிசத்தை உண்ணப் போகும் போது, இரண்டுசிங்கங்கள் அங்கே வர பூரித்தியும்னன் ஓடிவிட்டான். அப்படி அவன் ஓடும்போது அவன்எதிரே வந்த நான்கு பிராமணர்களைக் கொன்று தின்ன முற்பட்டான். அப்போது பிராமணர்களது கையிலிருந்த வேத ஏடுகள், மான்தோல் ஆசனம், அவர்கள் அணிந்திருந்த பூணூல் இவைகளைக் கண்டதாலும் தொட்டதாலும் அவனுக்குப் புத்தி தெளிந்தது.
பூரித்தியும்னன் தான் செய்த பெண் கொலை, பிராமணர்கள் கொலை இவைகளினால் பாவ ஆத்மாவாக ஆகிவிட்டதை உணர்ந்தான். பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பற்றவே அவன் பெரும் சண்டாளன் ஆகிவிட்டான். காட்டில் அலைந்து சாகல்யா என்ற தவமுனிவரைக் கண்டு பாவவிமோசனம் கேட்டான். அந்த முனிவர் ஐந்து கருப்புத் துணிகளைக் கொடுத்து அவனை உடுத்திக் கொள்ளக் கூறினார். காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி விசுவநாதரைத் தரிசித்தால் பாவ விமோசனம் ஆகும் என்று கூறினார். அவனும் முனிவர் சொற்படி, காசிக்குச் சென்றான். அவன் காசிமண்ணை மிதித்ததும் ஒரு துணி வெண்மை ஆகிவிட்டது. கங்கையில் மூழ்கி எழுந்தான். என்னே ஆச்சர்யம்! இறந்த அவனது மனைவி அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு உடன் எழுந்தாள். மற்றும் ஒரு கருப்பு ஆடை வெண்மை ஆகிவிட்டது. இரண்டு ஆடைகளையும் கங்கையில் அவிழ்த்து விட்டு மூன்று ஆடைகளுடன் கரையேறினான்.
இரண்டாவது அதிசயம்! இவனால் கொல்லப்பட்ட நான்கு பிராமணர்களும் கரையில் நின்று கொண்டு தம்பதிகள் இருவரையும் வரவேற்றனர். அவனதுபாவம் தீர மந்திரம் ஓதி அட்சதை தெளித்தனர். மூன்றாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரையும் மணி கர்ணிகா கட்டத்தில் அவர்கள் மூழ்கச் செய்தனர். நான்காவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. பின்பு விசுவநாதரைத் தொட்டு, பக்தியுடன் வழிபடக் கூறினர். அவ்விருவரும் அதன்படியே வழிபட, ஐந்தாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. அவனது பாவங்கள் எல்லாம் நீங்கிப் புனிதன் ஆனான். விசுவநாதர் ஆலயத்தின் முன்பு அவர்கள் இருவரையும் அவனது எதிரிகள் அன்புடன் வரவேற்றனர்.
நாட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது அரசை அவனிடமே கொடுத்து, மீண்டும் பூர்த்தியும்னனை அரசனாக்கினர். எனவே கங்கையில் மூழ்கி காசி விசுவநாதரைத் தரிசித்தால் கொடிய பாவங்களும் நீங்கிவிடும். எனவேதான் காசிக்கு விடும் பக்தர்கள், தம்பதிகளாக, இரு ஆடைகள் அணிந்து கங்கையில் மூழ்கி, ஓர் ஆடையை கங்கை நீரில் விட்டுவிட வேண்டும் என்கின்றனர். கரைக்கு வந்து பிராமணர்களைத் தரிசித்து அவர்களுக்கு தானம் வழங்க வேண்டும் என்றும் கூறுவர். விசுவநாதர் ஆலயம் சென்று விசுவநாதரைத் தொட்டு வழிபட வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றனர். அவ்வாறு செய்தால்தான், நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்கள் கூட விலகும் என்கின்றனர்.
இவ்வரலாற்றினால் நாம் கங்கை நீராடும் முறைக்கு விளக்கம் அறிகின்றோம். மாபலிச்சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்ட நாராயணன், திருவிக்கிரமராக ஓங்கி வளர்ந்து உலகளந்து விட்டு, மற்றொரு காலை தேவலோகம் வரை நீட்ட, ஆகாச கங்கை நீர்கொண்டு பிரம்மா அத்திருப்பாதத்தைக் கழுவிப் பூஜித்தார். அப்போது பெருக்கெடுத்து ஓடிய கங்கை நீரைச் சிவபெருமான் தன் சடையில் தாங்கிப் பூமியில் விட்டார். அந்த கங்கையே காசியில் புனிதத்தீர்த்தமாக விளங்குகிறது என்கின்றனர்.
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.
- சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது.
- அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.
மூலவர் - சங்கரலிங்கம்
அம்மன் - கோமதி அம்மன்
தல விருட்சம் - புன்னை
தீர்த்தம் - நாகசுனை தீர்த்தம்
ஊர் - சங்கரன்கோவில்
மாவட்டம் - திருநெல்வேலி
அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பாள் பார்வதி, "கோமதி" என்னும் பெயரில் பூலோகம் வந்து தவமிருந்த இடமே சங்கரன்கோவில். சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது.
தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு காட்ட, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். அவளுடன் தேவர்கள் பசுக்கள் வடிவில் வந்து வணங்கி வந்தனர். பசுவை ''கோ" என்பர். தவக்காலத்தில் அம்பாளின் முகம் "மதி" போல் பிரகாசித்தது. எனவே அவள் "கோமதி" எனப்பட்டாள். "ஆவுடையம்மாள்" என்றும் இவளை அழைத்தனர்.
"ஆ" என்றால் "பசு". "பசுக்களை உடையவள்" என்று பொருள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். திங்கள் கிழமைகளில் கோமதி அம்பாளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக்கிழமையில் தங்கப்பாவாடை அணிவிப்பர்.
திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் மாவிளக்கு ஏற்றுவர். அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். ஆனால், இங்கு அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ''ஆக்ஞா சக்ரம்" என்கின்றனர்.
கோவில் அமைப்பு...
சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.
திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் இலட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும்.
மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது.
இச்சன்னதியில் ஸ்படிகலிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியேபுறப்பாடாகிறார். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இதன் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள் ஆடித்தபசு விழா, 12 நாட்கள் நடக்கும்.
அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார்.
கோவில் நடை திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் - 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் - இரவு 9 மணி வரை.
- பார்வதி தேவி மேல்மலைனூருக்கு வரும் போது மூன்று காவல் தெய்வங்களை உடன் வந்தன.
- தண்ணீர் அல்லது கள்ளாவது கொஞ்சம் தாருங்கள் என்று சானர்களிடம் பார்வதி தேவி கேட்டாள்.
சிவபெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் நிர்வத்தியாகும் பொருட்டு பார்வதி தேவி மேல்மலையனூருக்கு நடந்து தாழனூரை(தற்போது தாயனூர் என்று அழைக்கப்படுகிறது) வந்தடைந்தாள். இரவு பொழுது நெருங்கியது பார்வதி தேவி தாழனூரில் உள்ள ஒரு வட்ட பாறையில் இரவு பொழுதை கழித்தால். தாழனூரில் தங்கியதால் இன்று தங்கினால் தாயனூர் என்றும் அழைக்கின்றனர். மேலும் பார்வதி தேவி தங்கிய இடத்தில் பார்வதி தேவின் முத்து அங்கு விழுந்ததால் அங்கு முத்தாலம்மன் என பெயர் பெற்று முத்தாலம்மன் ஆலயம் அங்கு வழிபாட்டுக்கு உள்ளது.
பார்வதி தேவி மேல்மலைனூருக்கு வரும் போது மூன்று காவல் தெய்வங்கள் உடன் வந்தன. அவர்கள் பாவடைராயன், மதுரைவீரன், காத்தவராயன் இவர்கள் பார்வதி தேவிக்கு காவலாக வந்தனர்.
பார்வதி தேவி மலையனூருக்கு வரும்போது அழகான ஒரு பொன்னேரி அதில் பனந்தோப்பு பனமரத்தில் சானார்கள் கள் இறக்கிக் கொண்டிருந்தனர் அப்போது பார்வதி தேவியின் காவல் தெய்வங்காளான பாவடைராயன், மதுரைவீரன், காத்தவராயன், பார்வதி தேவிடம் தாகமாக இருப்பதாக கூறினர்.
அதற்கு பார்வதி தேவி சரி வாருங்கள் சானர்கள் கள் இறக்கிகொண்டிருக்கிறார்கள் நான் சென்று உங்களுக்கு கள் வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு சானர்கள் அருகில் சென்றாள் பார்வதி தேவி....
பார்வதி தேவி சானர்களிடம் என் குழந்தைகளுக்கு தாகமாக இருப்தாகவும் என் குழந்தைக்கு தண்ணீர் அல்லது கள்ளாவது கொஞ்சம் தாருங்கள் என்று சானர்களிடம் பார்வதி தேவி கேட்டாள்..
கள்ளா கிடையாது.. பொன் பொருள் இருந்தால் கொடு கள் தருகிறோம் இல்லையெனில் நகரு என்று ஏளனம் செய்தனர் சாணர்கள் இதனால் கோபம் அடைந்த பார்வதி தேவி மேல்மலையனூர் ஏரியில் பனை மரம் எதுவும் இருக்ககூடாது என சாபம்மிட்டதால் இன்றும் ஏரியில் பனை மரங்கள் ஏதும் கிடையாது.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நிரந்தரமாக கோவில் தேர் இருக்கும்.
- தேர் செய்வதற்கு பனைமரம் புளியாமரம் காட்டுவாமரம் போன்ற மரங்களை பயன்படுத்தி ஒர் புதிய அழகான தேர் உருவாக்கப்படுகிறது.
மேல்மலையனூரில் வருடந்தோரும் மாசி மாதம் தேர்திருவிழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்கதர்கள் சாமி திரசனம் செய்வார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நிரந்தரமாக கோவில் தேர் இருக்கும். ஆனால் மேல்மலையனூரில் மட்டும் வருடந்தோறும் ஒர் புதிய தேர் செய்யப்படுகிறது. இந்த தேர் 15 நாட்களில் பச்சசை பனைமரங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது.
தேர் செய்வதற்கு பனைமரம் புளியாமரம் காட்டுவாமரம் போன்ற மரங்களை பயன்படுத்தி ஒர் புதிய அழகான தேர் உருவாக்கப்படுகிறது. மேல்மலையனூர் தேர் சக்கரம் தேவர்களாக பாவிக்கப்படுகிறது.
- மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
- கொள்ளை விடுவதற்காக, பக்தர்கள், உணவுப் பொருட்களை குவிப்பார்கள்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நடை பெறும். கோவிலில் இருந்து, விஸ்வரூப கோலத்தில் மயானத்தில் அங்காளம்மன் எழுந்தருளிய இருப்பார். அங்கு மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். மயானக்கொள்ளை விடுவதற்காக, பக்தர்கள், உணவுப் பொருட்களை குவிப்பார்கள். கோவிலில் இருந்து அங்காளம்மன் புறப்பட்டு வரும் போது, சாமி வந்து ஆக்ரோஷத்துடன் ஆடு பக்தர்கள், தங்கள் பற்களால், உயிருடன் இருந்த கோழியை கடித்து அம்மனுக்கு பலி கொடுப்பார்கள்.
அம்மன் வேடமிட்ட அரவாணிகள் தங்கள் மீது நடந்துச் சென்றால், தோஷம் நீங்கும் என கருதி, பக்தர்கள் பலர் நீண்ட வரிசையில் படுப்பார்கள். அவர்கள் மீது அரவாணிகள் நடந்துச் செல்வார்கள். இதில், தமிழகம், கர்நாடகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
- குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது!
- உடல் உபாதைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மூன்று சந்நிதிகள்
சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் ஈசனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் வீற்றிருப்பார்.
மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!
அபிஷேகம் கிடையாது
குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது! அலங்காரம் மட்டுமே!
அதனால் சந்திர மௌலீச்வரர் என்னும் லிங்கத்தை முன்னே நிறுத்தி, அதற்கு மட்டும் திருமுழுக்காட்டுதல், அன்னாபிஷேகங்கள் உண்டு!
சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசி தீர்த்தம் உண்டு!, வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு! இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு!
நோய் தீர்க்கும் புற்றுமண்
ஐம்பூதங்களில் இந்தக் கோயில் நிலம் சம்பந்தமான மண் தலமாகத் திகழ்கிறது. இதனால், இக்கோயிலில் உள்ள 'புற்றுமண்' வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் சுகம் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், வயல், வீடுகளின் செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
கோமதி அம்மன் சந்நிதி முன்பு உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கி தவம் செய்தால் அவை நீங்கும். அதே பகுதியில் உடல் உபாதைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வீட்டிலும் கனவிலும் விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் தென்பட்டாலும், விபத்து போன்றவற்றில் காயம், உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால், இக்கோயிலில் விற்கப்படும் உலோகத்தினால் செய்யப்பட்ட தகட்டால் ஆன பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் உருவம், மனித கை, கால், மார்பு, தலை போன்ற உறுப்புகளின் தகட்டை வாங்கி உண்டியலில் செலுத்தி வணங்குவதன்மூலம் பாதிப்புக்கள் நீங்கும், நிவர்த்தி கிட்டும் என்கின்றனர்.
பன்னிருநாள் திருவிழா
ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!
இறுதி நாளன்று, ஆடித் தபசு மண்டபம் மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது! ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!
அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை 'சூறை விடுதல்' என்ற பெயரில் அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
அம்பாளின் வேண்டுதலின்படி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் சிவபெருமான் அம்பாளுக்குக் காட்சியருள்வார்.
பக்தர்கள் சுற்றும் ஆடிச்சுற்று
ஆடித் தபசு கொடியேறிய பின் 'ஆடிச்சுற்று' என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். அதிக எண்ணிக்கையில் சுற்ற விரும்புவோர் ஆடி மாதம் முழுவதும் காலை, மாலை என சுற்றி வருவர். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
- ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை.
- சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு சிவஸ்தலம். ஈஸ்வரன் திருநாமம் சங்கரலிங்கம். அம்மன் திருநாமம் கோமதி. அம்மனுக்கு இன்னொரு திருநாமம் ஆவுடை அம்பாள். அரசு ஆவணங்களில் இந்த ஊர் பெயர் சங்கர நைனார் கோவில் என்று தான் உள்ளது. காலப்போக்கில் மருவி சங்கரன்கோவில் என்று தற்பொழுது அறியப்படுகிறது.
மதுரை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் இது. இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சங்கரநாராயணன் சன்னதி உள்ளது. சிவபெருமானும் விஷ்ணுவும் சரிபாதியாக அமைந்துள்ள சன்னதி இது. லிங்கோத்பவர் தோன்றிய புற்று இந்த சுவாமி சன்னதியில் வட மேற்கு பகுதியில் காணலாம்.
சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கும் பிரம்மாவுக்கும் தனி சன்னதிகள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூவரும் எழுந்தருளியுள்ள ஸ்தலம் சங்கரன்கோவில்.
தல வரலாறுபடி ஆடி மாதம் கோமதி அம்மன் புன்னைவனத்தில் தவம் செய்தாள். ஆனால் ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை. அம்மன் ஐப்பசியில் மீண்டும் தவம் இருந்து சங்கரலிங்க சுவாமியை மணம் புரிந்தார் என்பது ஸ்தல புராணம். எனவே தான் இந்த கோவிலில் ஆடி தபசும் ஐப்பசி தபசும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கோமதி அம்மன் சன்னதியில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை உள்ளது. சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. இந்த கோவிலில் தினமும் ஏழு கால பூஜை நடைபெறுகிறது. அர்த்த ஜாம பூஜையின்போது அம்மன் சன்னதியில் பால் நிவேதனம் செய்யப்படுகிறது. அந்த பால் பருகினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளுகிறாள் அன்னை கோமதி. இங்குள்ள புற்றுமண் சகல நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.