search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மேலாண்மை"

    • கீழடியில் பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
    • குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தொல்லியல் துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனை நூலாக வெளியிட்டும் உலகறியச் செய்தது.

    நகர நாகரிகம் என்பதற்கு பல்வேறு கூறுகளை கொண்டு உள்ளது. வாழ்விடப்பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்கூடங்கள், நீர் மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள் போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளது என்றும் அதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்றும் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.

    நீர்மேலாண்மை சிறந்து விளங்கியதற்கு கீழடியில் பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் திறந்தவெளி வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உருளை வடிவிலான குழாய்கள், பல்வேறு எண்ணிக்கைகளில் உறை கிணறுகள் போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை பல்வேறு பயன்பாட்டுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சங்க காலத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த நீர் மேலாண்மை சிறப்பினை இதன் மூலம் அறியலாம்.

    இந்நிலையில் கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்பட்டுள்ளது. இது ஆறு உறைகளுடன் காணப்படும், இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம் 36 செ.மீ., அகலம் 18 செ.மீ. என்ற முறையில் காணப்படும். தற்பொழுது வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ.மீ நீளத்தை கொண்டுள்ளது.

    இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்த குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×