search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்புப் பணி"

    • கொல்கத்தா- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இடுப்பளவு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டது.
    • ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் அடுத்த 2 நாட்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என மத்திய நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.

    திருப்பதி:

    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 62 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    விஜயவாடா,மொகல்ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்தை மழையின் காரணமாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரைமட்டமாகியது.

    அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் தூங்கியவர்கள் மீது பாறைகள் விழுந்ததில் உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தொடர் மழையின் காரணமாக உப்பலாவில் ஆசிரியர் ராகவேந்திரா பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு தனது காரில் மான்விக், சவுரிஷ் என்ற மாணவர்களை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றார். பாலத்தில் அதிக அளவு மழை வெள்ளம் சென்றதால் கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டது. காரில் இருந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதேபோல் மங்களகிரியில் கண்டாலய பேட்டை மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் நாகரத்தினம்மா என்பவர் இடிப்பாடுகளில் சிக்கி உயிர் இழந்தார். மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.

    கொல்கத்தா- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இடுப்பளவு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    என்.டி.ஆர் மாவட்டம் நந்தி காமம்-ஐதராபாத், விஜயவாடா செல்லம் ரெயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ஜனஷ்டாபதி எக்ஸ்பிரஸ் ரெயில் மழையின் காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ரத்து செய்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் பலத்த மழை பெய்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் அடுத்த 2 நாட்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என மத்திய நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.

    ×