search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vibhuti Preparation"

    • 800 கிலோவுக்கும் அதிகமான விபூதி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
    • ஆர்டருக்கு ஏற்ப விபூதி சப்ளை செய்யப்படுகிறது.

    திருச்சி:

    கோவில்களில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக சிவன் மற்றும் முருகன், அம்மன் கோவிலில் விபூதி முக்கிய பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருச்சி திருவானைக் கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 2022-ம் ஆண்டு மே மாதம் விபூதி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது.

    அதற்காக கோவில் வளாகத்தில் தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. காவிரிக்கும் கொள்ளிடம் ஆற்றுக்கும் நடுவில் அமைந்துள்ள இந்த கோவில் இயற்கையான நீரைக் குறிக்கும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது.

    இங்குள்ள கோசாலையில் இருந்து சேகரிக்கப்படும் பசுவின் சாணம் கோவிலுக்குள் உள்ள நாச்சியார்தோப்பில் பல்வேறு உருண்டை வடிவங்களில் உலர்த்தப்பட்டு பின்னர் விபூதி தயாரிக்கப்படுகிறது. இந்த கோவிலில் பக்தர்கள் வழங்கிய 48 பசுக்கள் மற்றும் கன்றுகள் கோசாலையின் மூலமாக பராமரிக்கப்படுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் விபூதிக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இங்கு தயாராகும் விபூதி திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு சிவன் கோவில்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மேலும்

    திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் தவிர கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கோவில்களுக்கும் கூட கடந்த 2 ஆண்டுகளில் தேவையைப் பொறுத்து 800 கிலோவுக்கும் அதிகமான விபூதி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இங்கு கோவில் பணியாளர்கள் மாட்டு சாணத்தை பயன்படுத்தி, வேறு பொருட்கள் மற்றும் ரசாயனம் கலக்காமல், விபூதி தயாரிக்கிறார்கள் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள குறைந்தது 20 கோவில்களுக்கு ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை 880 கிலோ விபூதி சப்ளை செய்யப்பட்டுள்ளது.

    கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமி நாதசுவாமி கோயில், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், ஆலங்குடி முல்லை வனநாத சுவாமி கோயில், திருக்கருகாவூர் கோவில் உள்ளிட்ட கோயில்களுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சி அருகே வயலூர் முருகன் கோவில், கடலூர் விருத்தாசலம், வடலூர் சத்திய ஞான சபை ஆகிய கோவில்களுக்கு ஆர்டருக்கு ஏற்ப விபூதி சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த விபூதி ஒரு கிலோவுக்கு ரூ. 200 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சுமார் 120 கிலோ விபூதி கையிருப்பில் உள்ளது. இங்கு கோசாலையில் பராமரிக்கப்படும் பசுக்களுக்கு கிட்டத்தட்ட 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிலில் பயிரிடப்படும் பசுந்தீவனம் அளிக்கப்படுகிறது என்றார்.

    தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர்கோவில் மற்றும் திருவண்ணாமலை கோவில்களில் விபூதி தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×