கிரிக்கெட் (Cricket)

பிறந்தநாளன்று ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்: ரசிகர்கள் அதிர்ச்சி

Published On 2024-06-01 15:51 GMT   |   Update On 2024-06-01 15:51 GMT
  • தினேஷ் கார்த்திக் இன்றளவும் சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தி வருகிறார்.
  • சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தார்.

புதுடெல்லி:

தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இன்றளவும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக, தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த கூடுதல் பாக்கியம்.

இத்தனை ஆண்டுகள் எனக்குத் துணையாகவும், தூணாகவும் இருந்தவர்கள் என்னுடைய பெற்றோர். அவர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணைநின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.

விளையாட்டைப் பின்பற்றும் ரசிகர்களுக்கும், பாலோயர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News