உள்ளூர் செய்திகள்

நகர்மன்ற தலைவர் சாதிர் பொதுமக்களுக்கு 2 வண்ணங்களில் குப்பைத் தொட்டிகளை வழங்கிய காட்சி.

தென்காசி நகராட்சி பகுதியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்- நகர்மன்ற தலைவர் உறுதி

Published On 2022-11-02 13:28 IST   |   Update On 2022-11-02 13:28:00 IST
  • நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது.
  • குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் எனவும் சாதிர் கேட்டுக்கொண்டார்.

தென்காசி:

தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் போன்று நகராட்சி வார்டு பகுதிகளில் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது.

அதன்படி தென்காசி நகராட்சிக்குட்பட்ட 18 -வது வார்டு பகுதியில் நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து நகர்மன்ற தலைவரிடம் கூறினர்.

இதனை கேட்டறிந்த நகர்மன்ற தலைவர் சாதிர் பொதுமக்களின் முறையான குடிநீர் வசதி, சாலை வசதி ,தெருவிளக்கு வசதி உள்ளிட்டஅடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கிறேன் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார். மேலும் தங்கள் பகுதியில் உள்ள குப்பைகளை வாறு கால்களில் போடாமல் அதனை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து சேகரிக்க வசதியாக 2 வண்ணங்களில் குப்பைத் தொட்டிகளை வார்டு பகுதி சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு நகர் மன்ற தலைவர் சாதிர் தனது சொந்த செலவில் வழங்கினார்.

மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் எந்நேரமும் அடிப்படை வசதிகள் குறித்து தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், நகர தி.மு.க. பொருளாளர் சேக் பரீத், தென்காசி நகராட்சி யின் சுகாதார ஆய்வாளர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News