ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்
- 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
- 207 பேர் ஒருநாள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தங்களது 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், விடுமுறை தின, இரவு நேர, வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகளைக் கைவிடுதல், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட மருத்துவ விடுப்பு. ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வுநிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல், கணினி ஆபரேட்டர்களை பணிவரன் முறை செய்தல், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், அவுட் சோர்சிங் முறையை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 207 பேர் ஒருநாள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக 4 வட்டாரம் 1 தலைமையிடம் ஆகிய இடங்களில் ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள், அலுவலர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.