search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து தோற்றது ஏன்? சச்சின் விளக்கம்
    X

    ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து தோற்றது ஏன்? சச்சின் விளக்கம்

    • ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன.
    • களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது.

    புதுடெல்லி:

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்தது.

    அதைத் தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 40.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து பிட்ச்சில் எப்படி சுழல்கிறது என்று பார்த்து விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அது எப்படி ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களின் கைகளிலிருந்து வருகிறது என்பதை பார்க்காமல் விளையாடியதே தோல்விக்கான காரணம் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன. குறிப்பாக ரஹ்மதுல்லா குர்பாஸ் திடமான இன்னிங்ஸ் விளையாடினார். இங்கிலாந்துக்கு இது மோசமான நாள்.

    எப்போதுமே தரமான ஸ்பின்னர்கள் பந்து வீசும்போது பந்துகளை நீங்கள் அவர்களுடைய கைகளில் இருந்து வருவதை பார்க்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதனை செய்ய தவறினார்கள்.

    மாறாக அவர்கள் அதை பந்து பிட்ச்சில் எப்படி சுழன்று வருகிறது என்று பார்த்து விளையாடினார்கள். அதுவே அவர்களுடைய தோல்விக்கு காரணம் என்று நான் கருதுகிறேன். களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×