search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நாளை நடக்கிறது
    X

    நம் பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளிய காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நாளை நடக்கிறது

    • 4 -ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 4-ம் திருநாளான 29-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    7-ம் நாளான நேற்று நம் பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளி உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இன்று(வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்தரவீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். 4.30 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 4 -ந் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×